5 ஆண்டுகளுக்கு முன்பு வரை பட்ஜெட் உரையில் என்ன வரப்போகிறது என்பது மட்டுமே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். அந்த வகையில் நிதியமைச்சர் கொண்டு வரும் பட்ஜெட் உரையின் மீதுதான் அனைவரின் கவனமும் இருக்கும். ஆனால் சமீப ஆண்டுகளாக அந்த பட்ஜெட் உரையை கொண்டு வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் புடவையும் பேசுபொருளாகியுள்ளது. அவர் கட்டி வரும் புடவையை வைத்தே சிலர் பட்ஜெட் குறித்து யூகிக்கத் தொடங்கிவிடுகின்றனர்.
அவர் பளீர் நிறத்தில் அணிந்திருந்தால் அதற்கு ஏற்ப பட்ஜெட் இருக்கும். எளிமையாக இருந்தால் அதுபோலவே பட்ஜெட்டும் இருக்கும் என்பது பலருடைய கருத்து. புடவை எப்படி இருக்கிறது என்பது மட்டுமல்லாமல் அவர் கட்டும் புடவையின் தனித்துவமும் , அதன் வரலாறும் பேசப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு பட்ஜெட் உரைக்கு நிர்மலா சீதாராமன் கட்டி வந்த புடவை மிகவும் பிரபலமாகியுள்ளது. பொதுவாகவே நிர்மலா சீதாராமன் கைத்தறி காட்டன் புடவைகளையே அதிகம் விரும்புவார். அதை அவரே பல நேர்காணல்களில் ஒப்புக்கொண்டுள்ளார். அவரின் விருப்பம் போலவே பட்ஜெட் நாளன்று அவர் கட்டும் புடவைகளும் இருக்கும்.
அந்த வகையில் இன்றைய பட்ஜெட் தாக்கலில் நிர்மலா சீதாராமன் கட்டிய புடவை மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பரிசாகக் கொடுத்துள்ளார். இந்த புடவை கர்நாடக மாநிலம் தர்வாட் மாவட்டத்தில் நெய்யப்பட்ட காட்டன் புடவையாகும். புடவை, நவலகுண்டா எம்பராய்டரி வேலைபாடுகளுடன் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எம்பராய்டரி முழுக்க முழுக்க கையிலேயே வடிவமைக்கப்பட்ட வேலைபாடுகள் கொண்டது. அவர் அணிந்திருந்த சிவப்பு நிற புடவை தர்வாட் மாவட்டத்தில் உள்ள ஆரதி கைத்தறியில் வாங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் அவருக்கு 7 கைத்தறி புடவைகள் அனுப்பப்பட்டுள்ளது. அதிலிருந்து அவர் 2 புடவையை தேர்வு செய்துள்ளார். அதில் ஒன்று சிவப்பு நிறம் மற்றொன்று நீல நிறம். அதில் சிவப்பு நிற புடவையைதான் இன்று அவர் கட்டியிருந்தார். அவர் அந்த புடவையை தேர்வு செய்த பின்பு எம்பராய்டரி வேலைபாடுகளை செய்துள்ளனர். அந்த எம்பராய்டரியில் மயில் , தாமரை, கோவில் கோபுரம் போன்றவை இடம்பெற்றுள்ளன. புடவையின் பார்டர் பிரவுன் நிறத்தில் கோல்டன் நிற சரிகையுடன் நெய்யப்பட்டுள்ளது.