கோடை காலம் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் அனைவரும் கோடைக்காக தங்களை தயார்படுத்தி வருகின்றனர். முக்கியமாக கோடை காலங்களில் உருவாகும் அதிக வியர்வையினால் நமது உடலில் பல்வேறு விதமான தொற்றுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக நகங்களின் ஆரோக்கியத்தை பற்றி பலரும் அதிக அக்கறை காட்டுவதில்லை. பருவநிலைக்கு ஏற்ப நமது நகங்களிலும் சில மாற்றங்கள் உண்டாகும்.
இதைப் பற்றி பேசிய வல்லுனர் ஒருவர் கூறுகையில், நகங்களை சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் பேணிக்காப்பது மிகவும் முக்கியமானதாகும். நமது உடலில் உண்டாகும் அதிக வியர்வையினால் நகங்களில் பூஞ்சை தொற்றுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மேலும் புற ஊதா கதிர்களினால் நகங்களில் பாதிப்புகள் உண்டாகலாம். இது போன்ற பிரச்சினைகளில் இருந்து நகங்களை பாதுகாப்பதற்கான சில எளிய வழிமுறைகளை பற்றி பதிவில் பார்ப்போம்.
கோடை காலம் வந்துவிட்டாலே அதிக வெப்பத்தினால் நமது சருமம் கருத்துப் போய்விடும். மேலும் இவற்றினால் நகங்களிலும் பாதிப்புகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. அதிக வியர்வையினால் உண்டாகும் கிருமிகள் நகங்களில் சேர்ந்து நோய் தொற்றுக்களை உருவாக்கலாம். இதனை தடுக்க வெளியிடங்களுக்கு செல்லும்போது கையுறைகளையும், கால்களுக்கு சாக்ஸ் அணிந்து செல்வது, அதிக அளவில் வியர்வை வெளிவரும்போது அவற்றை கிரகித்துக் கொள்ள உதவும். இவற்றைத் தவிர கைகளையும் நகங்களையும் ஈரப்பதம் இன்றி சுத்தமாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.
கோடை காலங்களில் தோட்ட வேலைகள் செய்வது, நீச்சல் பயிற்சிக்கு செல்வது ஆகியவை அனைவருக்கும் பிடித்தமானவை. அதே சமயத்தில் இந்த செயல்முறைகளுக்கு பின் நமது நகங்களை சுத்தமாக கழுவ வேண்டும். மேலும் அவ்வபோது மாய்சுரைஸர் பயன்படுத்தி அவற்றை ஈரப்பதத்துடன் வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். இவை புற ஊதா கதிர்களில் இருந்து நகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.
இவற்றைத் தவிர ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கங்கள், வயது மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஆகியவை நமது நகங்களில் ஆரோக்கியத்தை குறைத்து அவற்றை எளிதில் உடையும் படியும், நோய் தொற்றுக்களுக்கள் தாக்கும் வகையிலும் மாற்றி விடுகின்றன. இந்தப் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க அவ்வபோது நகங்களை வெட்டி சுத்தமாக வைத்துக் கொள்வதோடு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.