''ஓடி விளையாடு பாப்பா'' என்ற பாரதியார் பாடலை அனைவருக்கும் தெரியும். இந்த பாடலில் ''காலை எழுந்ததும் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாடல், மாலை முழுவதும் விளையாட்டு என வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா'' என்று எழுதியிருப்பார். அதாவது பாடலின் துவக்கமே ஓடி விளையாடு என்றும் சொல்லும் அவர், படிப்பு எவ்வளவு முக்கியமோ, அது போலவே மாலையில் விளையாட்டும் முக்கியம் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்துகிறார்.
ஆனால் பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளின் படிப்பு கெட்டுவிடும் என பெற்றோர்கள் அவர்களை விளையாட அனுமதிப்பதில்லை. இந்தியாவில் 120 கோடி மக்கள் தொகை இருந்தும், அதில் அதிகம் இளைஞர்களாக இருந்தாலும், கிரிக்கெட் தவிர சர்வேதச அளவில் மற்ற விளையாட்டுக்களில் சாதிப்பவர்கள் வெகு சிலரே ! விளையாட்டில் சாதிப்பது இந்தியாவுக்கு பெருமை என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒருவர் தினமும் விளையாடுவதால் அவருக்கு என்ன விதமான நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
தலைமைப் பண்பு : விளையாட்டு ஒரு மாணவனை நல்ல தலைவராக்கி, அவனது டீமை வழிநடத்தும் திறமையை வளர்க்க உதவும். அதன் காரணமாக எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் அவனுக்கு முடிவெடுக்கும் திறமை இயல்பாகவே வளரும். மேலும் ஒரு டீமை உருவாக்கி, அந்த டீமின் பலம், பலவீனங்களை ஆராய்ந்து அதற்கேற்ப முடிவுகள் எடுத்து அந்த டீமை வெற்றி பெற உதவும். இந்த திறன் விளையாடும்போது மட்டுமல்லாமல், வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் உதவும்.
உடல் வளர்ச்சி : ஒருவர் விளையாடுவதால் அவரது உடலுக்கு வேலை கிடைக்கும். அதனால் தசையும், எலும்புகளும் வளர்ந்து, நமக்கு நல்ல தோற்றத்தை கொடுக்கும். மேலும் நன்றாக விளாயாடினால் , நன்றாக சாப்பிட முடியும். அதன் காரணமாக நம்மால் எனர்ஜியாக இருக்க முடியும். மேலும் செல்களின் வளர்ச்சி, ஹார்மோன், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். உடல் உறுப்புகளின் செயல்பாடு நன்றாக இருக்க உதவும். ஒரு மாணவர் உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருந்தால் அவரால் தனது படிப்பில் நன்றாக கவனம் செலுத்த முடியும்.
தன்னம்பிக்கை மற்றும் மதிப்பு : விளையாடும்போது குழந்தைகள் அவர்களது பலம் மற்றும் திறன் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும். அது அவர்களை தனித்துவம் மிக்கவர்களாக மாற்ற முடியும். விளையாட்டுக்களில் அவர்களுக்கு பாராட்டும் பரிசும் கிடைத்தால் அது அவர்களுக்கு வாழ்க்கையில் புதிய சவால்களின் போது அதனை எதிர்கொள்ள தன்னம்பிக்கை உருவாகும்.
டீம் ஒர்க் : விளையாட்டு குழந்தைகளை ஒன்றாக இணைந்து விளையாடுவதால் மற்ற குழந்தைகளை நன்றாக புரிந்துகொள்ள முடியும். ஒரு டீமில் வெவ்வறு வயதினர், பாலினத்தவர், மாற்று மதத்தினர் இணைந்து விளையாட வைக்கும். இதன் காரணமாக மற்றவர்களிடம் இருந்து குழந்தைகள் கிரியேட்டிவான, புத்திசாலித்தனமான விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். மேலும் குழந்தைகள் தங்களது பிரச்சனைகளை பிறருடன் பகிர்ந்துகொள்ள முடியும். அதன் மூலம் பிற குழந்தைகளின் உதவிகள் அவர்களுக்கு கிடைக்கும். இவ்வளவு நன்மைகள் இருப்பதால் குழந்தைகளை இனிமேலாவது விளையாட அனுமதிப்போம். அதன் மூலம் அவர்களது ஆளுமைத் திறனை வளர்க்க உதவுவோம்.