இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஹிந்தி திரைப்படங்களில் தான் பணியாற்றக் கூடாது என ஒரு கூட்டம் உழைத்து வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு ஆதரவாக பலரும் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், பாலிவுட் இயக்குநரான சேகர் கபூர், ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார். பாலிவுட் திரையுலகம் தொடமுடியாத உயரத்தை ஆஸ்கர் விருதின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் அடைந்ததே அவரை புறக்கணிக்கக் காரணம் என சேகர் கபூர் கூறியிருந்தார்.
ஏ.ஆர்.ரகுமானைத் தொடர்ந்து ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் சிறந்த இசைக்கலவைக்காக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் இந்தி திரையுலகம் தன்னை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆஸ்கர் விருது வென்ற பின்னர் இந்தியில் பட வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும், தன்னை தேவையில்லை என்று இந்தி பட தயாரிப்பு நிறுவனங்கள் கூறி வருவதாகவும் ரசூல் பூக்குட்டி வேதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் வேலுமணி ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், “பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி, நல்ல படங்களும் அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக உள்ளனர் என்று இந்திய மக்களின் இதயம் மட்டுமல்ல உலகளவில் இமயம் தொட்ட நம் தமிழ் மண்ணின் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது. எல்லைகளில்லா இசையை எல்லைகள் கடந்து இயக்கி இந்தியாவிற்கே புகழ் சேர்த்த நமது இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானுக்க்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள். ஏ.ஆர்.ரகுமானுக்கு என்னுடைய மனப்பூர்வமான ஆதரவை பதிவு செய்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.