ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் கோமாளி. இந்த திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி அறிமுகமானார். 100 நாட்களைக் கடந்து ஓடிய கோமாளி திரைப்படத்திற்கு பிறகு லவ் டுடே என்ற திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி மற்றும் நாயகனாக நடித்தார். இந்த திரைப்படம் தற்போது 100 நாட்களை கடந்துள்ளது.
இதற்கான வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. அந்த விழாவில் பேசிய பிரதீப் ரங்கநாதன் தன்னை நாயகனாக அறிமுகப்படுத்த பலரும் யோசித்தனர் என்று தெரிவித்தார். அத்துடன் ஏஜிஎஸ் நிறுவனம்தான் அறிமுக நாயகனாக இருந்தாலும் பரவாயில்லை கதையின் மீது நம்பிக்கை வைத்து லவ் டுடே திரைப்படத்தை இயக்கினார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் தான் படித்த கல்லூரியில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் கிடைக்காமல் சுவரின் மீது ஏறிநின்று பார்த்ததாகவும், ஆனால் தற்போது அவரின் இசையில் படம் இயக்கியது தனக்கு பெரும் மகிழ்ச்சி என்றும் பெருமிதம் அடைந்தார். அத்துடன் லவ் டுடே திரைப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரின் பெயரை சொல்லி அவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் விருதுகளும் வழங்கப்பட்டன.