தமிழ் சினிமாவில் புராண திரைப்படங்களும் காவிய திரைப்படங்களும் மக்களுக்கு நீதி போதனைகளை வழங்கி வந்த நிலையில் கற்பனைக் கதைகளும் காதல் கதைகளும் அதிகரிக்கத் தொடங்கியது 70களின் பிற்பகுதியில், சண்டைக்காட்சிகள் படத்தில் சுவாரசியத்திற்காக சேர்க்கப்பட்ட நிலையில் சண்டைக் காட்சிகளை பார்ப்பதற்கு என்று இளைஞர் கூட்டம் உருவானது . இந்த நிலையில் தற்போது வெளியாகும் திரைப்படங்களில் வன்முறை காட்சிகள் உச்சம் தொடுவது தமிழ் சினிமாவில் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.
ஹாலிவுட் திரைப்படங்களின் தாக்கம் தமிழ் சினிமாவில் அதிகரிக்க தொடங்கிய பிறகு ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகரான வன்முறை காட்சிகள் தமிழ் சினிமாவிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அண்மையில் வெளியாகி அசுர வெற்றியை ஈட்டிய கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் முழுக்க நாயகன் சுட்டுத் தள்ளும் உயிர்களின் எண்ணிக்கையை கணக்கிட முடியாத அளவிற்கு படத்தில் வன்முறை தலைவிரித்து ஆடியது.
விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்திலும் ரத்தம் சொட்ட சொட்ட பல கொலைகள் நிகழ்த்தப்பட்டிருக்கும். இதனை சிறுவர்கள் விசிலடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.இது ஒருபுறமிருக்க தற்பொழுது பப்ஜி விளையாடும் தலைமுறையை கவரும் வகையில் படத்தில் பைட்டர் ஜெட் விமானத்தில் சென்று பல கொலைகளை செய்வது போல காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தது. பெரிய நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களில் சர்வசாதாரணமாக இப்படியான வன்முறை காட்சிகள் இடம்பெற்று வரும் நிலையில் வன்முறைக்காகவே ஒரு சில திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் உருவாக தொடங்கி உள்ளன.
படம் முழுக்க நாயகி கீர்த்தி சுரேஷும் செல்வராகவனும் கொலைகளை செய்து குவித்து கொண்டே போக கழுத்தை கரகரவென அறுக்கும் காட்சிகளும் ரத்தம் முகமெல்லாம் தெறிக்கும் காட்சிகளும் படம் முழுக்க நிரம்பியிருந்தது. முன்பெல்லாம் சென்சார் என்ற தணிக்கை துறை படத்தில் வன்முறை காட்சிகளை குறைக்க அல்லது முற்றிலும் நீக்க முயற்சிகள் எடுத்து வந்த நிலையில் தற்போது தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்று விட்டால் எந்த அளவுக்கும் வன்முறை காட்சிகளை வைக்கலாம் என்ற வகையில் அனுமதி அளிக்கப் படுவதால் ஏ சான்றிதழ்களுடன் திரைப்படத்தை இயக்க இயக்குனர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன் மற்றுமொரு பகுதியாக தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தின் பெயர் அறிவிப்பு விளம்பரத்தில் ரத்தம் சொட்ட சொட்ட விளம்பரம் வெளியாகி இருப்பது இந்தத் திரைப்படம் மற்றொரு வன்முறை திரைப்படமாக உருவாகும் என்பதை பறை சாற்றுகிறது. இந்த காரணங்களால் வன்முறை காட்சிகள் நிரம்பிய சினிமாக்களை இனி நவீன காலத்து சினிமாக்கள் என ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை