விக்ரம் வேதா படத்தின் திரைக்கதை வடிவத்தை விக்ரமாதித்யன், வேதாளம் கதையிலிருந்து புஷ்கர் - காயத்ரி எடுத்துக் கொண்டனர். இந்தக் கதை அம்புலிமாமா சிறுவர்கள் புத்தகத்தில் தொடராக வந்தது. விக்ரமாதித்யன் வேதாளத்தை புதைக்க சுடுகாட்டுக்கு தோளில் சுமந்து செல்கையில், வேதாளம், 'விக்ரம மகாராஜாவே நான் ஒரு விடுகதை சொல்கிறேன்.
அதற்கு சரியான பதில் அளிக்காவிட்டால் உன் தலை சுக்குநூறாக உடையும்' என விடுகதையை சொல்ல ஆரம்பிக்கும். 'ஆடுவான் ஓடுவான் ஒற்றைக்காலில் நிற்பான் அவன் யார்?' என்பது போன்ற இரண்டுவரி விடுகதையல்ல வேதாளம் சொல்வது. அவை கதைகள். சிக்கலான தீர்வை கொண்டவை. கதைக்கு சரியான முடிவை விக்ரமாதித்யன் சொன்னதும், வேதாளம் பறந்து போய் மீண்டும் முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்கத் தொடங்கும்.
தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் மீண்டும் வேதாளத்தை தோளில் சுமந்து செல்கையில் என, அடுத்த கதை தொடங்கும்.இதைப் படிக்கும் போது உங்களுக்கு அம்புலிமாமா கதைப்புத்தகமும், அதில் இடம்பெற்றிருக்கும் ஓவியங்களும் நினைவுக்கு வந்தால், அம்புலிமாமா விக்ரமாதித்யன், வேதாளம் தொடரின் முக்கிய அம்சமே, அதில் இடம்பெறும் ஓவியங்கள்தான்.. விக்ரமாதித்யன் உருவிய வாளுடன் வேதாளத்தை தோளில் சுமந்து செல்லும் ஓவியம்
அம்புலிமாமாவுக்கும், சினிமாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பிரபல தயாரிப்பாளர்கள் நாகிரெட்டி, சக்ரபாணி இருவரும்தான் அம்புலிமாமாவை உருவாக்கியவர்கள். ஆந்திராவைச் சேர்ந்த இவர்கள் 1947 இல் சந்தமாமா என்ற குழந்தைகள் புத்தகத்தை வெளியிட்டனர். சந்தமாமாவின் நிறுவனர் மற்றும் எடிட்டர் சக்ரபாணி, அச்சிட்டு, வெளியிடுபவர் நாகிரெட்டி. தெலுங்கில் சந்தமாமா என்று வெளிவந்த போதே அதனை தமிழில் அம்புலிமாமா என்ற பெயரில் வெளியிட்டனர்.
நீதிக்கதைகள், படக்கதைகள், மாயஜாலத் தொடர்கள், புராணக் கதைகள் என குழந்தைகளையும், சிறுவர்களையும் கவரும் வகையில் அம்புலிமாமா இருந்தது. இதன் ஆரம்ப காலத்தில் பங்காற்றிய மூத்த ஓவியர்களில் சித்ரா என்கிற வீரராகவன் முக்கியமானவர். அவருடன் ஆச்சார்யா, பாப்பையா என்பவர்களும் ஓவியர்களாக பணியாற்றினர். 1951 இல் சங்கர் அம்புலிமாமாவில் இணைந்தார். அதன் பிறகு அம்புலிமாமாவின் நிறமே மாறிப்போனது.
விக்ரமாதித்யன், வேதாளம் கதையை சங்கரின் ஓவியம் இல்லாமல் முதிய தலைமுறையினரால் நினைவுகூர முடியாது. அந்தளவு அவரது ஓவியங்கள் வாசகர் மனதில் பதிந்து போனவை. சங்கரின் பூர்வீகம் திருப்பூர் அருகேயுள்ள தாராபுரம். அவர் பிறந்தது (1924) ஈரோடு அருகிலுள்ள சின்ன கிராமம். 1934 இல் அவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. 1941 இல் சென்னையில் உள்ள அரசு நுண்கலை கல்லூரியில் சேர்ந்தார். 1952 இல் சந்தமாமாவில் இணைந்த பிறகு, கடைசிவரை அதில் பணியாற்றினார். 2020 செப்டம்பர் 29 ஆம் தேதி சங்கர் இயற்கை எய்தினார். அதாவது நேற்று முன்தினம் சங்கர் என்ற மகத்தான ஓவியரின் இரண்டாவது ஆண்டு தினம்.
அம்புலிமாமாவின் விக்ரமாதித்யன், வேதாளம் கதை பண்டைய புராண புனைவுகளிலிருந்து எடுத்தது. வேதாளம் சொல்லும் விடுகதைகளுக்கு, விக்ரமாதித்யன் சரியான பதில் கண்டுபிடிக்கும் போது, அந்தக் கதை இன்னும் துலக்கம் பெறும். இதனை பிரேம் வொர்க்காக வைத்து புஷ்கர் - காயத்ரி உருவாக்கிய புத்திசாலித்தனமான ஸ்கிரிப்ட், விக்ரம் வேதா. வேதாளமான விஜய் சேதுபதி ஒவ்வொரு முறை கதை சொல்லும் போதும், விக்ரமாதித்யனான மாதவன் அதிலிருந்து புதிதாக ஒன்றை கண்டுபிடிப்பார். அம்புலிமாமாவின் புராண புனைவுகளிலிருந்து மாடர்ன் விக்ரம் வேதா கிடைத்தது போல், இன்னும் ஏராளம் அந்தப் புனைவுகளிலிருந்து கிடைக்க வாய்ப்புள்ளது.