தனது படங்கள் மூலமாக பல வெற்றி, தோல்விகளை பார்த்திருந்தாலும் சியான் விக்ரம் தான் ஒரு நடிப்பு அசுரன் என்பதை எப்போதுமே நிரூபித்து வருகிறார். அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2 ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. அமரர் கல்கி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் பேசும் போது, “ஆதித்த கரிகாலனால் எப்படி நந்தினியை மறக்க முடியாதோ, அதேபோல் என்னால் இந்த படத்தில் நடித்ததை மறக்க முடியாது. மணி ரத்னம் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன், அவர் இயக்கிய சினிமாவில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு பெருமை. இரண்டு முறை இராவணன், இரண்டு முறை பொன்னியின் செல்வன் ஆக மொத்தம் 4 முறை அவருடன் படம் நடித்திருக்கிறேன்” என்றார்.
இதற்கிடையில் இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம் 'தங்கலான்'.இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விக்ரம் இப்படப்பிடிப்பில் மீண்டும் இணைந்துள்ளார்.
இப்போது விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. " When you reduce life to black & white, you never see rainbows" என்ற கேப்ஷனுடன் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். வெள்ளை நிற குர்தாவில் விக்ரம் இருக்கும் அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்டுகளையும் தெளித்த வண்ணம் உள்ளனர்.