முத்துராமன் மகன் கார்த்திக், ஜெமினி கணேசனின் மகள் ஜீஜி இருவரையும் வைத்து ஸ்ரீதர் நினைவெல்லாம் நித்யா படத்தை இயக்கினார். இளையராஜாவின் இசை படத்தை வேறொரு தளத்துக்கு கொண்டு சென்றது. இளைஞர்கள் படத்தை கொண்டாடித் தீர்க்க, ஸ்ரீதரின் பிற படங்களின் நடுத்தர வயது ரசிகர்கள், இதென்ன கூத்து என்று சலித்துக் கொண்டனர்.
நினைவெல்லாம் நித்யா படத்தின் ரிசல்டை பார்க்க ஸ்ரீதரும், சித்ராலயா கோபுவும் தியேட்டர் தியேட்டராக சென்ற போது இளசுகளின் கொண்டாட்டத்தையும், நடுத்தர வயதினரின் முணுமுணுப்பையும் நேரடியாக கண்ணுற்றனர். ஸ்ரீதர் - கோபு கூட்டணி திசைமாறிவிட்டது என்று சில பத்திரிகைகள் தங்களது விமர்சனத்தில் குறிப்பிட்டன. ஸ்ரீதர் படமென்றால் அழுத்தமான கதையும், வித்தியாசமான பார்வையும் இருக்கும் என்ற நம்பிக்கையில் விளைந்த விமர்சனங்கள் அவை என்பதை உணர்ந்து கொண்டவர் அடுத்து ஆலயதீபம் படத்தை எடுத்தார்.
ஆலயதீபத்தின் வெற்றியால் மகிழ்ந்த அப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஆர்.கங்காதரன் தனது அடுத்தப் படத்தை இயக்கித் தரும் பொறுப்பை ஸ்ரீதரிடம் ஒப்படைத்தார். வளர்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்தை ஹீரோவாக போடுவது எனவும் முடிவானது. ரஜினியின் ஆக்ஷன் இமேஜுக்கு ஏற்ப கதையை தயார் செய்தனர். அதுதான் துடிக்கும் கரங்கள். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை தமிழில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய அந்தப் படம் 1983 மார்ச் 4 ஆம் தேதி வெளியானது. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதே நாளில் துடிக்கும் கரங்களுடன் வெளியான மற்றொரு திரைப்படம் டி.ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா. தனது காதல் மனைவியின் பெயரில் அவர் எடுத்தப் படம். ஒருதலை ராகம் ஹிட்டுக்குப் பிறகு டி.ஆர்.எடுத்த வசந்த அழைப்புகள் சுமாராகப் போனது. அதையடுத்து எடுத்த ரயில் பயணங்களில் ஹிட். அதற்கடுத்து எடுத்த நெஞ்சில் ஒரு ராகம், ராகம் தேடும் பல்லவி இரண்டுமே சுமார். உயிருள்ளவரை உஷா படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இப்படியொரு சூழலில் கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி, ஒளிப்பதிவு, எடிட்டிங் செய்து, இயக்கி, தயாரித்த படத்தை டி.ஆர். வெளியிட்டார். மறந்துவிட்டோமே, படத்தில் சைக்கிள் செயின் சுழற்றி காதலர்களை சேர்த்து வைக்கும் பாத்திரத்திலும் நடித்தார்.
நளினிக்கு இதுதான் நாயகியாக முதல் படம். கங்கா நாயகன். இவர்கள் காதலுக்கு எதிரி நளினியின் அண்ணன் ராதாரவி. படத்தை காப்பாற்றியது காதலும், டிஆரின் பாடல்களும். உன்னைத்தானே..., மோகம் வந்து..., இந்திரலோகத்து..., கட் அடிப்போம்..., வைகைக்கரை காற்றே..., இதயமதை கோவில் என்றால்..., அடி என்னடி.. என படத்தில் இடம்பெற்ற ஏழு பாடல்களும் ஹிட். அன்று அனைத்து வீடுகளில், கச்சேரிகளில், திருவிழா நிகழ்ச்சிகளில் ஒலிக்கும் பாடலாக இவை அமைந்தன. படம் 25 வாரங்களை கடந்து வெள்ளிவிழா கொண்டாடியது.