மோகன் நடித்த ஆயிரம் பூக்கள் மலரட்டும் திரைப்படத்தின் மூலம் 1986ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஈ.ராமதாஸ். அதனைத் தொடர்ந்து ராமராஜன் நடித்த ராஜா ராஜா தான், சுயம்வரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், எழுத்தாளராகவும் உலா வந்தார். பல்வேறு படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், ஈ.ராமதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த மாதம் 23-ம் தேதி இரவு உயிரிழந்தார்.
70 மற்றும் 80-களில் தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பலருக்கும் சண்டைப்பயிற்சி கற்றுக்கொடுத்தவர் ஜூடோ கே.கே.ரத்னம். 1200க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டைப்பயிற்சியாளராக பணியாற்றியதால் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி 26-ம் தேதி உடல்நலக்குறைவால் ஜூடோ ரத்னம் அவரது சொந்த ஊரான குடியாத்தத்தில் உயிரிழந்தார்.
தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தியில் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஜமுனா. 1954-ம் ஆண்டு பணம் படுத்தும் பாடு என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். எல்.வி.பிரசாத் இயக்கிய மிஸ்ஸியம்மா படம் ஜமுனாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது. 86 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து கடந்த ஜனவரி 27-ம் தேதி உயிரிழந்தார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நெல்லை தங்கராஜ். தெருக்கூத்து கலைஞரான நெல்லை தங்கராஜ் இப்படத்தில் பரியனாக நடித்த கதிரின் தந்தையாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நெல்லை தங்கராஜ் கடந்த 3-ம் தேதி உயிரிழந்தார்.
தெலுங்கு திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி தமிழ், இந்தி மொழிகளில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் கே.விஸ்வநாத். இவர் இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து திரைப்படங்களை எடுத்து வெற்றி அடைந்தார். இவர் முதன்முதலாக 1965 ஆம் ஆண்டு அக்னேனி நாகேஸ்வரராவ் நடிப்பில் வெளியான ‘ஆத்ம கௌரவம்’ என்ற படத்தின் மூலமாக திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் பெரும் வெற்றி அடைந்ததால் தெலுங்கு துறையில் கவனிக்கத்தக்க இயக்குனராக வளர்ந்தார் கே.விஸ்வநாத். ஏராளமான படங்களை இயக்கி சாதனைபடைத்துள்ளார். இதனிடையே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இயக்குநர் கே விஸ்வநாத் கடந்த 3-ம் தேதி உயிரிழந்தார்.
1971ம் ஆண்டு முதல் திரையுலகில் இருந்த வாணி ஜெயராம் 10,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் வாணி ஜெயராம் பாடல்களை பாடியுள்ளார். 1971 ஆம் ஆண்டு குட்டி என்ற இந்தி படத்தில் பாடகியான அறிமுகமான அவர் 1974 ஆம் ஆண்டு தீர்க்க சுமங்கலி படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடல் பாடி பிரபலமானார். வாணிஜெயராம் மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மொழிகளில் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் பாடகி வாணி ஜெயராம் கடந்த 4-ம் தேதி உயிரிழந்தார்.
தமிழ் திரையுலகில் வீடு, மனைவி, மக்கள் திரைப்படம் மூலமாக 1988ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானவர் டி.பி.கஜேந்திரன். ராமராஜன் நடித்த எங்க ஊரு காவல்காரன், கார்த்தி நடித்த பாண்டிய நாட்டுத் தங்கம், பிரபு நடித்த பட்ஜெட் பத்மநாதன், சீனா தானா உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், வீட்டில் இருந்தபடி ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் டி.பி.கஜேந்திரன் கடந்த 5-ம் தேதி உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மயில்சாமி. நகைச்சுவை வேடங்களில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் உருகவைக்கும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு கடந்த 19-ம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு சென்று வரும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.