1975 இல் சினிமாவில் அறிமுகமான ரஜினி, 1978 இல் பைரவி படத்தின் மூலம் நாயகனானார். அதற்குப் பிறகும் அவர் இரண்டாவது நாயகன், வில்லன் என நடித்து வந்தார். அதே 1978 இல் பைரவிக்குப் பிறகு வெளிவந்த இறைவன் கொடுத்த வரம் படத்தில் வுமனைசராக நடித்திருந்தார். சிவாஜியை வைத்து 'ப' வரிசைப் படங்களை இயக்கி, தமிழ் திரையுலகில் நீங்கா இடம்பிடித்த பீம்சிங் 'இறைவன் கொடுத்த வரம்' படத்தை இயக்கினார்.
விஜயகுமாரும், சுமித்ராவும் அண்ணன், தங்கைகள். சுமித்ரா நன்றாகப் படிக்கக் கூடியவர். அவருக்கு விஜயகுமார் ரஜினிகாந்தை நிச்சயம் செய்வார். மணமேடையில் ரஜினிகாந்த தாலிகட்டிய கொஞ்ச நேரத்தில் அவரை போலீசர் கைது செய்வார்கள். பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர் ரஜினி என்பது தெரியவரும். அப்படி திருமணமான அன்றே கணவனை பிரிய வேண்டிய நிலை சுமித்ராவுக்கு ஏற்படும். அதன் பிறகு நல்ல மனம் கொண்ட ஸ்ரீதர் சுமித்ராவை திருமணம் செய்வார்.
வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருக்கையில் விபத்தில் ஸ்ரீதர் மரணமடைய, சுமித்ராவின் இல்லறம் இரண்டாவதுமுறையும் பாதியில் அறுந்து போகும். வேலையில் கவனம் செலுத்தி துன்பத்தை மறக்கலாம் என நினைக்கும் சுமித்ராவுக்கு அதிலும் சோதனை ஏற்படும். சிறையிலிருந்து திரும்பி, வேறொரு பெண்ணை திருமணம் செய்து, ஒரு குழந்தையும் பெற்று திருந்தி வாழ்ந்து கொண்டிருக்கும் ரஜினியை சந்திப்பார். இன்னொரு பக்கம், சுமித்ராவின் முறைப்பையன் அவரை திருமணம் செய்ய விரும்புவார். இந்த நெருக்கடிகள், இழப்புகள் எல்லாம் சேர்ந்து சுமித்ரா உயிரைவிடுவதுடன் பார்வையாளர்களை துன்பக்கடலில் ஆழ்த்தி வழியனுப்பி வைப்பார் இயக்குனர். மொத்தப் படத்தில் கவர்கிறவர் ரஜினிகாந்த்.
படத்தில் அவரது கதாபாத்திரப் பெயரும் ரஜினிகாந்த்தான். ஸ்டைலாக பைக்கில் வந்து, பெண்ணிடம் தகராறு செய்கிறவனை அடித்து விரட்டும் ஆரம்பக் காட்சியிலேயே மனதில் தங்கிவிடுவார். அதன் பிறகுதான் தெரியும், அந்த ஆளே அவர் செட்டப் பண்ணியதுதான் என்பது. இப்படி ஒவ்வொரு பெண்ணாக காதலித்து ஏமாற்றுவதுதான் அவரது தொழில். சுமித்ராவை பெண் பார்க்க வருகையில் ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் விதம் அப்போதே அப்ளாஸை அள்ளியது. இடைவெளைக்குப் பின் தவறை உணர்ந்து திருந்தியவராக அடக்கமான நடிப்பை தந்திருப்பார்.
இடிவிழுந்தவன் காலில் பாம்பு கடித்த கதைதான் இந்தப் படம். சுமித்ராவுக்கு துன்பத்தின் மேல் துன்பமாக வந்து சேரும். எவ்வளவு நேரம்தான் ரசிகர்கள் பொறுமையாக இதனை பார்த்துக் கொண்டிருப்பார்கள்? படாபட் ஜெயலட்சுமிக்கு வழுக்கை விழுந்த சோ ஜோடி. விஜயகுமாருக்கும் தங்கையை நினைத்து உருகுகிற வேடம். மொத்தத்தில் ஒரு சோக காவியம். அதில் ரஜினியின் ப்ளேபாய் எபிசோட் மட்டும் சோபித்தது. எனினும் அவராலும் படத்தை காப்பாற்ற முடியவில்லை.