தமிழ் சினிமா உலகில் ஒரு தமிழ் பெண் முன்னணி கதாநாயகியாக ஜொலிப்பது குதிரை கொம்பாகவே இருந்தது. 90களில் அக்கதையை மாற்றி சாதித்து காட்டினார் த்ரிஷா. அவருக்கு பின் அந்த இடத்தில் பொன் வசந்தமாக அமர்ந்தவர் நடிகை சமந்தா. சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்தவரான சமந்தா கெளதம் மேனன் இயக்கிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றியும் அப்படத்தின் தெலுங்குப் பதிப்பில் கதாநாயகியாகவும் நடித்து ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ரசிகர்களின் உள்ளம் கொள்ளை கொண்டார்.
சூர்யாவுடன் 'அஞ்சான்', விஜய்யுடன் 'கத்தி', விக்ரமுடன் '10 எண்றதுக்குள்ள', சிவகார்த்திகேயனுடன் 'சீம ராஜா தனுஷுடன் 'தங்க மகன்' என முன்னணி நாயகர்களின் நாயகி ஆகி ’சமத்து பெண் சமந்தா’ என்று பெயர் பெற்றார். மேலும் தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் சினிமாவைக் கலையாகவும் தொழில்முறை உணர்வுடனும் அணுகும் அவரது பாங்கை சொல்லியது.
நாயகிகளில் சிகரமான சமந்தா அடுத்து விஜய்யுடன் 'கத்தி', 'தெறி', 'மெர்சல்' என மூன்று திரைப்படங்களில் நடித்து இமயமுமானார். இம்மூன்று திரைப்படங்களிலும் தனக்கான பாத்திரத்தை அழகோடு ரசிக்கும்படி கையாண்டிருந்தார் சமந்தா. அதோடு சிம்ரன், த்ரிஷா வரிசையில் விஜய்யுடன் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன நடிகையாக விஜய் ரசிகர்களின் அன்பையும் பெற்றார்.
பெரிய நட்சத்திரமாக தான் மாறிய பின்னும் கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தில் இரண்டாம் நிலை கதாபாத்திரத்திலும்……’புஷ்பா’ திரைப்படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ என்ற ஒரு குத்து பாடலுக்கு அட்டகாச ஆட்டம்போட்டும் சினிமா மீதான தன் காதலை சொன்ன சமந்தா சாமானியப் பெண்களின் தன்னம்பிக்கை சின்னமே.