ஏவிஎம் பார்வையாளர்களின் ரசனையை ஆழமாக புரிந்து கொண்ட நிறுவனங்களில் ஒன்று. எந்தக் கதையை, எப்படி எடுத்தால் ஓடும் என்ற கதை ஞானம் கொண்டவர்கள். முரட்டுக்காளை, சகலகலாவல்லவன் என ஆக்ஷன் அதிரடிப் படங்களை எடுத்துக் கொண்டே முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம் என குடும்பக் கதைகளை எடுத்து அவற்றையும் வெள்ளிவிழா கொண்டாட வைத்தார்கள்.
கம்யூனிஸ சிந்தனைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்து சந்திரசேகர், விஜயகாந்தை வைத்து சிவப்புமல்லி திரைப்படத்தை எடுத்து வெற்றியும் பெற்றவர்கள் ஏவிஎம் நிறுவனத்தார். பார்வையாளர்களின் ரசனைக்குள் மாற்றிச் சிந்திப்பதில் ஏவிஎம் நிறுவனம் போல் இன்னொரு நிறுவனம் இதுவரை வரவில்லை. அவர்கள் ரஜினியை வைத்து எடுத்த முதல் படம் முரட்டுக்காளை 1981 இல் வெளியானது. எஸ்.பி.முத்துராமன் இயக்கம். படம் பம்பர் ஹிட். அடுத்து 1982 இல் போக்கிரிராஜா, 1983 இல் பாயும்புலி, 1984 இல் தெலுங்குப் படத்தை தழுவி நல்லவனுக்கு நல்லவன், 1986 இல் மிஸ்டர் பாரத். 1987 இல் மனிதன்.
1981 இல் ரஜினியை வைத்து படம் தயாரிக்க ஆரம்பித்தவர்கள், அனேகமாக எல்லா வருடமும் அவரை வைத்து படம் எடுத்தார்கள். மேலே உள்ள அனைத்துப் படங்களையும் இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன் என்பது இன்னொரு ஆச்சரியமான தகவல். ஏவிஎம் ரஜினியை வைத்து முதலில் தயாரித்த 6 படங்களும் ஆக்ஷன் அதிரடிப் படங்கள். அனைத்தும் ஹிட் படங்கள். வேறொரு நிறுவனமாக இருந்தால், இதே ஆக்ஷன் அதிரடியை தொடர்ந்திருப்பார்கள். ஆனால், ஏவிஎம் மாற்றி யோசித்தது. ரஜினிக்கு இருக்கும் குழந்தைகள், பெண்கள் ஆதரவை அறுவடை செய்ய விரும்பியது.
எஸ்.பி.முத்துராமன் முதலில் ஏ.சி.திரிலோகசந்தரின் பாபு (1971) திரைப்படத்தை தழுவி இந்தப் படத்தை எடுக்க நினைத்தார். ஆனால், அது கலைப் படம் போல் இருக்கும், என்னுடைய இமேஜுக்கு ஒத்து வராது என ரஜினி மறுக்க, ஏவிஎம் சரவணனும் அதனை ஒத்துக் கொண்டார். பிறகு பஞ்சு அருணாச்சலம் தனது உன்னைத்தான் தம்பி (1974) படத்தையும், சவுண்ட் ஆஃப் மியூஸிக், மேரி பாப்கின்ஸ் படங்களையும் தழுவி ராஜா சின்ன ரோஜா படக்கதையை எழுதினார்.
இந்த லைவ் ஆக்ஷன் வித் அனிமேஷன் காட்சியை இந்திய அனிமேஷனின் தந்தை எனப்படும் ராம் மோகன் அமைத்தார். இதற்காக 84,000 படங்கள் வரையப்பட்டன. இந்தப் படங்களின் தொகுப்புதான் அனிமேஷன் சித்திரங்கள் அசைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தின. ஏவிஎம் நிறுவனம் நினைத்தது போல் படத்தை குழந்தைகள் பெரிதும் விரும்பினர். குடும்பம் குடும்பமாக திரையரங்கில் சென்று படத்தைப் பார்த்தனர். 175 நாள்கள் ஓடி ராஜா சின்ன ரோஜா சாதனை படைத்தது.
ரஜினியை வைத்து ஆறு ஆக்ஷன் படங்களை தந்துவிட்டு, அவரை வைத்து குழந்தைகளை மையப்படுத்தி ஒரு படத்தை எடுக்கலாம் என ஏவிஎம் நிறுவனமும், எஸ்.பி.முத்துராமனும் நினைத்ததே ஓர் ஆச்சரியமான விஷயம். அப்படியான மாற்றி யோசிக்கும் துணிச்சல்மிக்க நிறுவனங்களும், இயக்குனர்களும் இன்று இல்லை என்பது வருத்தத்திற்குரியது.