நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மைல் கல் திரைப்படங்களில் ராஜபார்ட் ரங்கதுரையும் ஒன்று. திரைத்துறையில் கொடிகட்டிப் பறந்த அவரது ஆரம்பகால நாடக வாழ்க்கையை நினைவுப்படுத்தும்விதமாக இந்தப் படத்தின் கதையை பாலமுருகன் எழுதியிருந்தார். உடனே, சிவாஜியின் வாழ்க்கைக் கதையா என்று நினைக்க வேண்டாம். அதீத திறமைகள் கொண்ட ஒரு நாடகக் கலைஞனின் எழுச்சியும், வீழ்ச்சியும் பேசும் ஒரு படைப்பு.
சிவாஜியை வைத்து பல படங்கள் தந்த பி.மாதவன் இயக்கத்தில் 1973 இல் ராஜபார்ட் ரங்கதுரை வெளியானது. இதில் சிவாஜி நாடகக் கலைஞன் ரங்கதுரையாக பத்திரம் ஏற்றிருந்தார். கதை நாடகக்காரனை பற்றியது என்பதால் அல்லி அர்ஜுனன், பவளக்கொடி, வள்ளி கல்யாணம், அரிச்சந்திரன் போன்ற புராண நாடகங்கள் படத்தில் இடம்பெற்று, சிவாஜியின் நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்தது.
ஹாம்லெட் நாடகத்தில் சிவாஜி ஆங்கிலத்தில் அருவிபோல் பேசுகையில் தியேட்டரில் விசில் பறக்கும். இந்தக் காட்சியில் சிவாஜிக்கு டப்பிங் பேசியவர் ஷேக்ஸ்பியர் சுந்தரம் என்பவர். சிவாஜியே அருமையாக ஆங்கிலம் பேசுவார். பின் எதற்காக டப்பிங் குரலை அவர் ஒத்துக் கொண்டார் என்பது ஆச்சரியம். ஷேக்ஸ்பியர் சுந்தரத்தின் ஆங்கிலப் புலமையை ரசிகர்களும் அனுபவிக்கட்டும் என நினைத்திருக்கலாம்.
ராஜபார்ட் ரங்கதுரையில் உஷா நந்தினி நாயகியாக நடித்தார். இவர் மலையாளி. திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். 1967 தனது 18 வது வயதில் அவள் மலையாளப் படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து மலையாளம், தமிழில் நடித்தார். தமிழில் அதிகமும் அவர் நடித்தது சிவாஜி படங்கள். பொன்னூஞ்சல், கௌரவம், மனிதனும் தெய்வமும், என்னைப் போல் ஒருவன், ராஜபார்ட் ரங்கதுரை போன்றவை அதில் சில. அறுபதுகளின் இறுதியில் நடிக்கத் தொடங்கிய உஷா நந்தினி எழுபதுகளின் இறுதியோடு நடிப்பதை நிறுத்தி, திருமணம் செய்து குடும்ப வாழ்க்கைக்கு திரும்பினார். அதன் பிறகு அவர் சினிமாவுக்கு வரவில்லை.
ராஜபார்ட் ரங்கதுரையில் சிவாஜியின் - அதாவது ரங்கதுரையின் தம்பியாக ஸ்ரீகாந்த் நடித்தார். தன்னை பணக்காரன் என நம்ப வைத்து பணக்காரப் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளும் வேடம். ரங்கதுரையின் தங்கை வேடத்தில் ஜெயா நடித்தார். நாடக வாத்தியார் வி.கே.ராமசாமி, மனோரமா, சுருளி என்ற முக்கூட்டணி அவ்வப்போது ரசிகர்களை சிரிக்க வைத்தது.
1973 இல் ராஜபார்ட் ரங்கதுரை வெளியான போது தமிழகமெங்கும் சிறப்பான வரவேற்பை பெற்றது. சென்னையில் இரண்டு வாரங்களில் 200 அரங்கு நிறைந்த காட்சிகள் என்ற சாதனையுடன் 100 நாள்களை கடந்து ஓடியது படம். 44 வருடங்கள் கழித்து, 2017 இல் ராஜபார்ட் ரங்கதுரையை டிஜிட்டலில் மேம்படுத்தி மறுவெளியீடு செய்தனர். அப்போது மதுரை மீனாட்சி திரையரங்கில் வெளியான படம் மீண்டும் 100 தினங்கள் ஓடி சாதனை படைத்தது.