பாலசந்தர் என்றால் முற்போக்கான கருத்துக்களைக் கொண்ட படங்களை எடுப்பவர் என்பது ரசிகர்கள் மனதில் தங்கிப்போன விஷயம். அவரது முற்போக்குக் கருத்தாக்கங்கள் மீது விமர்சனங்களும் உண்டு. கல்கி படத்தில் திருடனை துணிச்சலாகப் பிடிக்கும் நாயகி, அவனைக் கண்டு பயந்து போய் நின்ற செக்யூறாட்டியிடம், போய் சேலை கட்டிக் கொள் என்பாள். பெண்களாலும் துணிச்சலாக செயல்பட முடியும் என்பதை காட்டிய பாலசந்தர், சேலை கட்டிக் கொள் என்ற வசனத்தின் மூலம், சேலை பயத்தின், பேடித்தனத்தின் அடையாளமாக முன்வைப்பார். அந்தக் காட்சிக்கே முரணான வசனம் அது. பூவா தலையா படத்தில் பெண்களை இன்னும் இறங்கிப் போய் மட்டம் தட்டியிருப்பார்.
பூவா தலையாவில் கணேசன் மனைவியை இழந்தவன்;. அவனது மனைவியின் தாயார் - மாமியார் - பர்வதம்மா வைத்ததுதான் அந்த வீட்டின் சட்டம். அந்தளவுக்கு கணேசனுக்கு மாமியார் மீது பயம் கலந்த மரியாதை. இத்தனைக்கும் அவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் சம்பாதித்தது கணேசன். அண்ணனின் மாமியார் பயம் அவனது தம்பி சங்கருக்குப் பிடிப்பதில்லை. பர்வதம்மாவுக்கும் அவனுக்கும் தினசரி முட்டல் நடந்து கொண்டேருக்கும். அவன் சண்டை போடும் இன்னொரு நபர் பர்வதம்மாவின் இளைய மகள் நிர்மலா.
சங்கரை வீட்டை விட்டுத் துரத்த பர்வதம்மா அவன் மீது பல்வேறு அவதூறுகளை பரப்புவாள். பர்வதம்மாவின் இரண்டாவது மகள் குதிரை வண்டிக்காரனை திருமணம் செய்ததால், இரண்டாவது மகள் ஆற்றோடு போய்விட்டாள் என பொய் சொல்லியிருப்பாள். அந்த குதிரை வண்டிக்காரன் பர்வதம்மாவை பிளாக்மெயில் செய்து, அவர்களது வீட்டிற்கே வேலைக்கு சேர்வதுடன், என்னை உங்களோட மாப்பிள்ளைன்னு உங்க வாயாலேயே சொல்ல வைப்பேன் என சபதம் செய்வான். இந்த மூன்று சபதங்களில் சங்கர், குதிரை வண்டிக்காரன் இருவரது சபதமும் பர்வதம்மாவுக்கு எதிரானது என்பதால் இரண்டு பேரும் சேர்ந்து பர்வதம்மாவை குடைய, அவர் இவர்களை பந்தாட கடைசியில் என்னானது என்பது கதை.
ஜெய்சங்கரும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் சண்டைக் கோழிகளாக சிலுப்பும் போதே, சரிதான், இரண்டு பேரும் காதலிக்கப் போகிறார்கள் என்பது தெரிந்து விடுகிறது. பர்வதம்மாவின் விருப்பப்படி தம்பிக்கு பெண் பார்க்கப் போய், அந்தப் பெண் (ராஜஸ்ரீ) கணேசனை மாப்பிள்ளை என நினைத்து, அதுவே காதலாகிப் போவது இன்னொரு சுவாரஸிய திருப்பம்.
இரண்டு ஜோடிகளும் குற்றாலம் போன பிறகு காதலும், காமெடியும் குறைந்து குழப்பமே எஞ்சியது. அதை மட்டும் சரி செய்திருந்திருக்கலாம். மனோரமா வெள்ளந்தியாக நடிப்பதாக நம்மை படுத்தியெடுக்கிறார். பர்வதம்மாவின் வேலைக்காரியாக அவரது தில்முல்லுக்கு துணைபோகும் வேடத்தில் டி.பி.ராஜலட்சுமியும், எம்.ஆர்.ஆர்.வாசு லாட்ஜ் மேனேஜராகவும் சின்ன வேடங்களில் நடித்திருந்தனர். ஒருகாலத்தில் திரையை நிறைத்த ஆளுமைகள்.
படத்தில் பர்வதம்மா கதாபாத்திரம் குயுக்தி நிறைந்தது என்றாலும், அது பெண் இனத்தின் பிரதிநிதி இல்லை. அப்படியிருக்க ஆணும், பெண்ணும் சபதம் போட்டால் ஆண்தான் ஜெயிக்கணும், ஆண் பெண்ணைவிட எல்லாவிதத்திலும் உசத்தி, ஆண் ஆண்தான் என்பது போல் பர்வதம்மா கதாபாத்திரத்தை பேச வைத்தது, முற்போக்கு இயக்குனர் பாலசந்தரின் படமா என ஷாக் கொடுத்தது. எம்.எஸ்.வி. இசையில் மதுரையில் பறந்த மீன்கொடியை பாடல்... வெகுசிறப்பு.
பாலசந்தர் படங்களில் முதலில் திருவள்ளுவர் சிலையும், பின்னணியில் அகர முதல எழுத்தெல்லாம் குறளும் ஒலிக்கும். இதிலும் அப்படியே வரும். அதனைத் தொடர்ந்து அண்ணாவின் புகைப்படத்துக்கு முன் தயாரிப்பாளர் ராம அரங்கண்ணல் கணீர் குரலில், "அன்பே, அறமே, அருளின் வடிவமே... எல்லோரும் இன்புற்றிருக்க பாடுபட்ட லட்சிய தீபமே... என்றும் மறக்க முடியாத என் அண்ணனே..." என்று கூறி மலர்தூவி வணங்குவார். அவர் அண்ணாவின் பெருந்தொண்டர். பூவா தலையா வெளியாவதற்கு சில மாதங்கள் முன்புதான் அண்ணா மறைந்தார்.