ரஷிய எழுத்தாளர் தாஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவல் உலகப் புகழ்பெற்றது. இதன் பாதிப்பில் உலகின் பல மொழிகளில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இப்போதும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நாவலின் பாதிப்பில் கே.விஸ்வநாத் தெலுங்கில் நெரமு சிக்ஷ என்ற படத்தை 1973 இல் எடுத்தார். கிருஷ்ணா, பாரதி பிரதான வேடங்களில் நடித்தனர்.
படம் ஆந்திராவில் வெற்றி பெற்றதுடன் விமர்சனரீதியாக பாராட்டுக்களையும் பெற்றது. இதனை 1976 இல் தமிழில் நீதிக்கு தலைவணங்கு என்ற பெயரில் ரீமேக் செய்தனர். இதனை ப.நீலகண்டன் இயக்க, எம்ஜிஆர், லதா பிரதான வேடங்களில் நடித்தனர். நாயகன் ஏற்படுத்தும் விபத்தால் சிலர் பாதிக்கப்படுவதும், அதற்காக இன்னொருவன் சிறைக்குச் செல்வதும், நாயகன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதுடன், இறுதியில் குற்றத்தை ஒப்புக் கொண்டு நீதிக்கு தலைவணங்குவதும்தான் கதை.
கே.விஸ்வநாத்தின் படத்தில் நாயகன் ஏற்படும் குற்றவுணர்வு பிரதானமாக காட்டப்பட்டிருக்கும். படத்தைப் பார்த்த ரசிகர்கள் திரையரங்கில் கண்ணீர் சிந்தினர். இறுதியில் நாயகன், நாயகியுடன் ஒன்று சேராமல், குற்றத்தின் சம்பளமாக பிரிவை ஏற்றுக் கொள்வதாக முடியும். தமிழில், குற்றவுணர்வை குறைத்து, ஹீரோயிசத்தை தூக்கி, ரசிகர்களுக்குப் பிடித்தமான முறையில் சமைத்திருந்தார் இயக்குனர். பாடல்களும், சண்டைக் காட்சிகளும், உணர்வைத் தீண்டுகிற வசனங்களும் நீதிக்கு தலைவணங்கை வெற்றிப் படமாக்கின. படத்தில் அதிகம் பேசப்பட்டதும், ரசிகர்களை திரையரங்கில் வியப்புக்குள்ளாக்கியதும் படத்தின் கிளைமாக்ஸ்.
தெலுங்குப் படத்தில் இறுதிச் சண்டைக் காட்சி மலைக்கோவில் ஒன்றில் நடக்கும். நாயகன் அபாயகரமான பள்ளத்தில் தொங்கிக் கொண்டிருப்பார். தமிழில் அதனை முற்றிலும் மாற்றினர். அருவி ஆர்ப்பரித்துப் பாயும் மலையில் லொகேஷன் மாற்றப்பட்டது. சண்டையில் நாயகி லதா மலைச்சரிவில் விழுந்துவிடுவார். அவர் உடுத்தியிருக்கும் சேலை ஒரு தடுப்பில் மாட்டிக் கொள்ள, சேலையைப் பிடித்தபடி தொங்குவார். சேலை கிழிந்து லதா கீழே விழுகையில் எம்ஜிஆர் வந்து சேலையை பிடித்துக் கொள்வார். சேலை அவர் கையோடுவர, லதா தலைகீழாக பள்ளத்தில் விழுவார். நல்லவேளையாக ஒரு மரம் தடுக்க, அதன் கிளையைப் பிடித்துத் தொங்குவார். கீழே அருவித் தண்ணி நுரைத்துக் கொண்டு செல்லும்.
லதா பிடித்திருக்கும் கிளை முறிந்து, மரக்கிளையுடன் தண்ணீரில் விழுவார். கிளையுடன் தண்ணீர் அவரை அடித்துச் செல்லும். எம்ஜிஆர் நம்பியாரை அடித்து துரத்திவிட்டு, தண்ணியில் குதித்து, லதாவையும் பிடித்தபடி கரைக்கு நீந்தி வருவார். கண நேரத்தில் அருவியில் விழும் கண்டத்திலிருந்து இருவரும் தப்பிப்பார்கள். அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட சிறந்த கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளில் ஒன்றாக நீதிக்கு தலைவணங்கு கிளைமாக்ஸ் பெயர் பெற்றது.
இந்த கிளைமாக்ஸில் காட்டப்படும் இடம் ஒன்று போல் தெரிந்தாலும் அது ஒன்றல்ல, மூன்று இடங்கள். சிவசமுத்திரம் அருவி, ஒகேனக்கல் மற்றும் வலமுரி ஷேத்ரா ஆகிய மூன்று இடங்களில் காட்சிகளை படமாக்கி, அதனை ஒன்றிணைத்து, ஒரே இடம்போல் காட்டியிருந்தனர். 1953 இல் எம்ஜிஆர் நடித்த சக்ரவர்த்தி திருமகள் படத்தின் காட்சிகள் இந்த இடங்களில் படமாக்கப்பட்டதை நினைவுகூர்ந்து அவர் பரிந்துரைத்ததன் பேரில் இந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
படத்தில் இந்த கிளைமாக்ஸ் காட்சி 2 நிமிடங்கள் வரும். அதனை படமாக்க ஆறு நாட்கள் எடுத்துக் கொண்டனர். லதா கட்டியிருக்கும் மஞ்சள் நிறச் சேலை படத்தில் ஒருமுறைதான் கிழிந்து, கடைசியில் எம்ஜி ராமச்சந்திரனின் கையோடு வரும். ஆனால், படப்பிடிப்பில் சேலை அடிக்கடி கிழிய, மொத்தம் ஐந்து சேலைகளை பயன்படுத்தியுள்ளனர். ஆனால், இதையெல்லாம்விட வியப்பு, சேலையில்லாமல் பாவாடை, ஜாக்கெட்டில் தண்ணியில் விழும் லதாவை எம்ஜி ராமச்சந்திரன் காப்பாற்றும் போதும், கரைக்கு எடுத்து வரும் போதும் உடம்பில் சேலை இருக்காது, அவரை திண்டில் படுக்க வைக்கும் போது ஈரச் சேலையை மடிப்பு கலையாமல் கட்டியிருப்பார். லாஜிக்கைவிட பெண்ணின் மானம் பெரிது அல்லவா?