சில திரைப்படங்கள் வெற்றி, தோல்விகளைத் தாண்டி, வரலாற்றுச் சுவடுகளை தாங்கி நிற்கும். அப்படியொரு முக்கியமான திரைப்படம் மர்மயோகி. 72 வருடங்களுக்கு முன், 1951, பிப்ரவரி 2 ஆம் தேதி மர்மயோகி வெளியானது. எம்ஜிஆர், சகஸ்ரநாமம், அஞ்சலி தேவி, மாதுரி தேவி, எம்.என்.நம்பியார் உள்பட ஏராளமானோர் நடித்த இத்திரைப்படத்தை கே.ராம்னாத் இயக்கியிருந்தார்.
மர்மயோகியின் சரித்திர முக்கியத்தைச் சொல்ல, 1947 வெளியான ராஜகுமாரி திரைப்படத்திலிருந்து தொடங்க வேண்டும். அப்போது சென்ட்ரல் ஸ்டுடியோவை ஜுபிடர் பிக்சர்ஸ் குத்தகைக்கு எடுத்து, படங்கள் தயாரித்து வந்தது. அவர்களின் ஆஸ்தான கதாசிரியர் ஏஎஸ்ஏ சாமியிடம், ஜுபிடர் பிக்சர்ஸின் இரு பங்குதாரர்களில் ஒருவரான சோமசுந்தரம், ஒரு கதையை எழுதி, அதனை தனது கம்பெனி நடிகர்களை வைத்து இயக்கித் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி ஒரு கதையை சாமி எழுத, அப்போது நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதி புகழ்பெற்றிருந்த கருணாநிதியை திரைக்கதை, வசனம் எழுத வைத்தனர். கருணாநிதிக்கு அதுதான் முதல் படம். ஜுபிடர் பிக்சர்ஸ் கம்பெனி நடிகராக, சின்னச் சின்ன வேடங்களில் நடித்த வந்த எம்ஜிஆரை தனிக்கதாநாயகனாக ராஜகுமாரியில் அறிமுகப்படுத்தினர். கதாசிரியராக இருந்த சாமி முதன்முதலாக இயக்குனரானார். படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.
ராஜகுமாரியின் வெற்றியே எம்ஜி ராமச்சந்திரன் என்ற நாயகனுக்கும், அரசியல்வாதிக்கும் அடிப்படையாக அமைந்தது.. அந்தப் படம்தான் கருணாநிதியையும் சினிமாவில் அறிமுகப்படுத்தியது. இந்த வெற்றியால் மகிழ்ச்சியடைந்த எம்ஜிஆர், ஏஎஸ்ஏ சாமியிடம் இதேபோன்ற கதையை, தன்னைச்சுற்றி நிகழ்வது போல் எழுதச் சொன்னார். சாமியும் ஷேக்ஸ்பியரின் மெக்பத், ராபின்ஹுட், ஒன்றிரண்டு ஹாலிவுட் படங்கள் அனைத்தையும் பிசைந்து ஒரு கதையை சமைத்தார். கதைக்கு கரிகாலன் என்று அதில் வரும் நாயகனின் பெயரை சூட்டினர்.
ஜுபிடர் பிக்சர்ஸ் கரிகாலன் திரைப்படத்தை ராம்னாத்தை இயக்குனராக வைத்து தயாரித்தது. கரிகாலன் கற்பனை கதை. சரித்திர புருஷன் கரிகாலனையும், இந்தக் கரிகாலனையும் குழப்பிக் கொள்ளக் கூடாது என படத்தின் பெயரை மர்மயோகி என்று மாற்றினர். வில்லத்தனம் நிறைந்த ராணி கதாபாத்திரத்துக்கு பானுமதியை முயன்று இறுதியில் அஞ்சலிதேவியை ஒப்பந்தம் செய்தனர். கரிகாலன் - அதாவது எம்ஜிஆரின் காதலி கலாவதியாக மாதுரிதேவி நடித்தார். எம்ஜிஆரின் அண்ணனாக வீராங்கள் கதாபாத்திரத்தில் சகஸ்ரநாமம் நடித்தார். நம்பியார் இதில் நல்லவராக, எம்ஜிஆருக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் தோன்றினார். பிற்காலத்தில் எம்ஜிஆரை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கியவரும், சாண்டோ சின்னப்ப தேவரின் தம்பியுமான எம்.ஏ.திருமுகம் மர்மயோகிக்கு எடிட்டிங் செய்தார். அப்போது அவர் ஜுபிடர் பிக்சர்ஸில் எடிட்டராக பணிபுரிந்து வந்தார்.
மர்மயோகி வெளியான போது எம்ஜிஆர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பு நிலையை எடுத்திருந்தார். அதற்கு கருணாநிதி காரணமாக இருந்தார். ராஜகுமாரிக்குப் பிறகு எம்ஜிஆரும், கருணாநிதியும் நெருங்கிய நண்பர்களானார்கள். கதர் உடை, குங்குமப் பொட்டு, ருத்திராட்ச மாலை என்ற எம்ஜிஆரின் தோற்றத்தையும், அரசியல் பார்வையையும் கருணாநிதியின் நட்பு மாற்றியது. திராவிட இயக்கத்தின் கொள்கையின்பால் எம்ஜிஆர் ஈர்க்கப்பட்டார். மர்மயோகி வெளியானபோது, வளர்ந்து வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனுதாபியாக அவர் இருந்தார். படத்தில் கருப்புக்குதிரையில் கருஞ்சட்டையில் எம்ஜிஆர் அறிமுகமாகும்போது திரையரங்குகள் விசில் ஒலியால் நிறைந்தன. படம் மாபெரும் வெற்றியை பெற்று எம்ஜிஆரை ஸ்டாராக உயர்த்தியது.
மர்மயோகியை 1951, ஜனவரி 14 பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு வெளியிட தீர்மானித்து விளம்பரம் செய்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக படம் சென்சாரில் மாட்டிக் கொண்டது. படத்தில் பேய் வருவதாக காட்சி வைத்ததால் 'ஏ' சான்றிதழே தர முடியும் என்றது மத்திய தணிக்கைக்குழு. படத்தில் நாயகனின் தந்தை, வில்லியான ராணியை பேயைப் போல் நாடகமாடி அவ்வப்போது மிரட்டுவார். படத்திலிருந்து தூக்க முடியாத காட்சி என்பதால் வேறு வழியின்றி 'ஏ' சான்றிதழுக்கு ஒத்துக் கொண்டனர். முதலில் எடுத்த கிளைமாக்ஸ் திருப்தியில்லாமல் மறுபடி வேறு கிளைமாக்ஸை எடுத்தனர். இவற்றால் படம் திட்டமிட்டபடி தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளியாகாமல் தள்ளிப்போய் 1951, பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியானது.