ஆரம்பகாலத்தில் எம்ஜிஆர் கோவையில் இயங்கி வந்த ஜுபிடர் பிக்சர்ஸில் மாதச் சம்பளத்துக்கு நடித்துக் கொண்டிருந்தார். கோவை சென்ட்ரல் ஸ்டுடியோஸில் இந்தக் கம்பெனி இயங்கி வந்தது. 1935 முதலே படங்கள் தயாரித்து வந்த இந்த கம்பெனியில் கதாசிரியராக இருந்தவர் ஏஎஸ்ஏ சாமி. பெயரில் சாமி இருந்தாலும் இவரது குடும்பம் கத்தோலிக்க நம்பிக்கையை கொண்டது. சாமியின் தந்தை கொழும்பில் வியாபாரம் செய்து வந்ததால் சாமியின் ஆரம்பகால படிப்பு கொழும்பில் கழிந்தது. பிஏ பட்டப்படிப்பை சாமி லண்டன் யூனிவர்சிட்டியில் முடித்தார். அப்போதே அயல்நாட்டு இலக்கியத்தில் பரிட்சயம் கொண்டிருந்தார்.
படிக்கிற காலத்தில் புராண கதையை பின்னணியாகக் கொண்டு பில்கனன் என்ற நாடகத்தை சாமி எழுதினார். அவர்களது குடும்பம் தமிழகம் திரும்பியப் பிறகு சாமியின் நாடகத்தை திருச்சி வானொலி நிலையம் ஒலிபரப்பியது. பின்னாளில் ஜுபிடர் பிக்சர்ஸ் அதனை திரைப்படமாகவும் எடுத்தது. அதற்கு முன் வால்மீகி, ஸ்ரீ முருகன் ஆகிய ஜுபிடர் பிக்சர்ஸின் இரு படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதினார். ஜுபிடர் பிக்சர்ஸில் மாதச்சம்பளத்தில் நடித்த வந்த எம்ஜிஆர் ஸ்ரீ முருகன் படத்தில் சிவனாக சின்ன வேடம் ஒன்றில் நடித்தார். இவரும் பார்வதியாக நடித்த மாலதியும் ஒரு நடனமும் ஆடுவர்.
இந்தப் படத்தின் போது சாமியும், எம்ஜிஆரும் நட்பாயினர். எம்ஜிஆர் அவரை அண்ணன் என்றும், சாமி அவரை ராமச்சந்தர் என்றும் அழைப்பது வழக்கம். இந்நிலையில, தனது கம்பெனி நடிகர்களை வைத்து படமாக்க, ராஜா ராணி கதையொன்றை எழுதும்படி ஜுபிடர் பிக்சர்ஸ் சோமு கேட்க, சாமியும் எழுதினார். கதை நன்றாக இருந்ததால் அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த பி.யூ.சின்னப்பாவையும், டி.ஆர்.ராஜகுமாரியையும் நடிக்க வைக்க தீர்மானித்தார் சோமு,. ஜுபிடர் பிக்சர்ஸின் நடிகர்களை வைத்து எடுப்பதாகச் சொன்ன கதையை அவர்களை வைத்தே எடுக்கலாம், எம்ஜிஆரும், மாலதியும் நடித்தால் சிறப்பாக இருக்கும் என சாமி கேட்டுக் கொள்ள சோமு உடன்பட்டார். படத்தை இயக்கும் பொறுப்பும் சாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்படி சாமியின் பரிந்துரையால் ராஜகுமாரி என்ற அந்தப் படத்தில் முதல்முறையாக எம்ஜிஆர் நாயகனாக அறிமுகமானார். படம் பாதி முடிந்த நிலையில், ஜுபிடர் பிக்சர்ஸின் இன்னொரு பங்குதாரரான மொகைதீனுக்கு திருப்தியில்லாமல் படத்தை அத்தோடு கைவிடலாம் என்றார். முதல்முறை இயக்குனர் மற்றும் நாயகனாகியிருக்கும் சாமி, எம்ஜிஆர் ஆகியோரது எதிர்காலம் பாதிக்கப்படும் என்று எடுத்துக்கூறி, படப்பிடிப்பை தொடர சம்மதம் பெற்றார் சோமு.
பல தடைகளை கடந்து சாமி இயக்குனராகவும், எம்ஜிஆர் நாயகனாகவும், மு.கருணாநிதி திரைக்கதை, வசனகர்த்தாவாகவும் அறிமுகமான ராஜகுமாரி 1947 ஏப்ரல் 11 திரைக்கு வந்தது. படம் தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய வெற்றியைப் பெற்று எம்ஜிஆரை தனித்த நாயகனாக்கியது. கலைஞரை அறிமுகப்படுத்திய இதே நிறுவனம் மற்றும் இயக்குனர்தான் 1949 இல் அண்ணாவின் வேலைக்காரி நாடகத்தை அவரது திரைக்கதை, வசனத்தில் திரைப்படமாக்கினர்.