ஜமுனா கர்நாடக மாநிலம் ஹம்பியில் 1936, ஆகஸ்ட் 30 ஆம் தேதி பிறந்தார். வியாபாரம் நிமித்தமாக அவரது தந்தை நிப்பானி ஸ்ரீனிவாச ராவ் ஆந்திராவின் குண்டூருக்கு இடம்பெயர, குடும்பமும் ஆந்திரா வந்தது. அங்கு ஜமுனா கல்வி பயின்றார். ஜமுனாவின் தாய் கவுசல்யாதேவி. அப்பாவும், அம்மாவும் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள்.
ஜமுனா பள்ளியில் நன்றாகப் படித்ததால் அவரை மருத்துவராக்க விரும்பிய அவரது தந்தை, அதுகுறித்து ஆலோசனைப் பெற தனது நண்பர் டாக்டர் கரிகாபட்டி ராஜா ராவிடம் மகளை அழைத்துச் சென்றார். கரிகாபட்டி ராஜா ராவ் நவீன தெலுங்கு சினிமாவை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவர். புராணத்தில் உழன்று கொண்டிருந்த தெலுங்கு சினிமாவை சமூக சீர்த்திருத்த கதைகளை நோக்கி மடைமாற்றியவர். ஜமுனாவின் அழகையும், துறுதுறுப்புபையும் பார்த்த அவர், தனது நாடகத்தில் சின்ன வேடத்தில் நடிக்க வைத்தார்.
ஜமுனாவின் புகைப்படத்தைப் பார்த்த இந்தியின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் வி.என்.ரெட்டி, இவர் ஆந்திராவின் நர்கீஸாக புகழ்பெறுவார் என கணித்தார். ஜமுனாவை தானே திரையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் 1953 இல் தனது புட்டில்லு படத்தில் அவரை நாயகியாக்கினார் கரிகாபட்டி ராஜா ராவ். அடுத்த வருடம் பணம் படுத்தும்பாடு படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். தமிழ், தெலுங்கு, மராத்தி மொழிகளில் வெளியான இந்தப் படம் தோல்வியடைந்தது.
ஜமுனாவுக்கு 7 வயதாக இருந்த போது, ஆந்திராவில் நாடகம் நடிக்க வந்த சாவித்ரியை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஜமுனாவின் வீட்டில் தங்க வைத்தனர். நீ நாடகத்தில் நடிக்கலாமே என்று ஜமுனாவுக்கு நடிப்பு ஆர்வத்தைத் தூண்டி பள்ளி நாடகங்களில் நடிக்க காரணமாக இருந்த இருவரில் சாவித்ரியும் ஒருவர். இன்னொருவர், ஆசிரியராக இருந்து நடிகரான கொங்கரா ஜக்கையா. அந்த சாவித்ரியே ஜமுனா நாயகியாக வலம்வரவும் காரணமாக இருந்தார்.
தெலுங்கில் என்.டி.ராமராவ், அக்னியேனி நாகேஸ்வரராவ், தமிழில் சிவாஜி, எம்ஜிஆர், ஜெய்சங்கர் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜமுனா நடித்தார். அம்மா கவுசல்யாதேவி கர்நாடக இசைப்பாடகி என்பதால் சின்ன வயதிலேயே வாய்ப்பாட்டு முறையாக கற்றுக் கொண்டது நடிப்புக்கு உதவியது. 1957 இல் சிவாஜியுடன் நடித்த தங்கலை ரகசியம் படத்தில் இடம்பெற்ற, அமுதைப் பொழியும் நிலவே பாடலுக்கு ஜமுனா உதட்டசைத்து நடித்தார். அந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஜமுனாவின் புகழை கொண்டு சேர்த்தது.
தெலுங்கில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஜமுனா, ஒருகட்டத்தில் தமிழில் நடிப்பதை நிறுத்தி, நீண்ட இடைவெளிக்குப் பின் தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் கமலின் தாயாக நடித்தார். அழகு, திறமை இரண்டும் பொருந்திய அவர், இந்திராகாந்தியின் அழைப்பை ஏற்று காங்கிரஸில் இணைந்தார். 1989 இல் ராஜமுந்திரியிலிருந்து காங்கிரஸ் சார்பில் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.
பாகுபலி வந்த போது, தொழில்நுட்பம் தவிர இந்தப் படத்தில் எதுவும் இல்லை என்ற ஜமுனாவின் விமர்சனம் அப்போது சலசலப்பை ஏற்படுத்தியது. 1965 இல் ஜுலூரி ரமண ராவ் என்ற பேராசிரியரை ஜமுனா திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வம்சி கிருஷ்ணா என்ற மகனும், ஸ்ரவந்தி என்ற மகளும் உள்ளனர். 2014 இல் கணவர் இறந்த நிலையில், மூப்பு காரணமாக நேற்று ஜமுனா காலமானார்.