கல்யாணராமனில் கமல் இரட்டை வேடங்களில் நடித்தார். அதில் அப்பாவியான கமலை சிலர் கொலை செய்ய, அவர் ஆவி வடிவில் வந்து தனது சகோதரனின் துணையுடன் எதிரிகளை பழிவாங்குவது கதை. நீண்ட பல்செட் அணிந்து வித்தியாசமான நடிப்பில் அப்பாவி வேடத்தை கமல் செய்திருந்தார். இந்தப் படம் 1948 இல் வெளிவந்த எஸ்.பாலசந்தரின் இது நிஜமா? படத்தின் இன்ஸ்பிரேஷனில் எடுக்கப்பட்டது. கமலின் பல் நீண்ட கதாபாத்திரம் பஞ்சு அருணாசலமும், கமலும் சேர்ந்து வடிவமைத்தது.
எஸ்.பாலசந்தர் முப்பதுகளின் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். பல படங்களில் நடித்துள்ளார், இசையமைத்துள்ளார், இயக்கியுள்ளார். இவர் இயக்கிய படங்களுள் இது நிஜமா?, என் கணவர், கைதி, அவனா இவன், பொம்மை, நடு இரவில் படங்கள் முக்கியமானவை. பாடல்கள் இல்லாமல் 1954 இல் வெளிவந்த அந்த நாள் படத்தை இயக்கியதும் இவரே.
இது நிஜமா படத்தை கே.ஜி.புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, நடிகரும், கதாசிரியருமான ஜாவர் சீத்தாராமன் திரைக்கதையை எழுதினார். ஒளிப்பதிவாளர் கிருஷ்ணகோபால் படத்தை இயக்கினார். எஸ்.பாலசந்தர் மாதவன், கோபால் என இரட்டை சகோதரர்களாக இதில் நடித்தார். மாதவன் பட்டப்படிப்புக்காக லண்டன் சென்ற நிலையில், காதல் விவகாரம் ஒன்றில் அங்கு வைத்து கொலை செய்யப்படுவார். அவரது ஆவி தனது சகோதரன் கோபாலை தேடி வந்து நடந்த விவரங்களைச் சொல்லி, எதிரிகளை பழிவாங்கும். அவ்வப்போது கோபாலின் உடம்புக்குள்ளும் மாதவனின் ஆவி புகுந்து கொள்ளும்.
இது நிஜமா?வில் மாதவனின் காதலி நிர்மலாவாக என்.ராஜமும், கோபாலின் காதலி நளினியாக சரோஜினியும் நடித்தனர். எஸ்.பாலசந்தரே படத்துக்கு இசையமைத்தார். மொத்தம் 14 பாடல்களில் பெரும்பாலானவற்றை எஸ்.பாலசந்தரே பாடினார். புராண, இதிகாச திரைப்படங்கள் கோலோச்சிய காலத்தில் இது நிஜமா? படத்தின் கதை உண்மையிலேயே வித்தியாசமானது. படத்தை நவீனத்திலும் நவீனம் என்று விளம்பரப்படுத்தினர். இந்த கதையை 1945 இல் வெளியான வொண்டர் மேன் ஆங்கிலப் படத்திலிருந்து எடுத்துக் கொண்டனர். அதில் இரட்டையர்களாக அப்போதைய முன்னணி நகைச்சுவை நடிகர் டேனி கேய் நடித்தார்.
வொண்டர் மேன் சென்னையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தமிழுக்கேற்ப மாற்றி கதை செய்தார் ஜாவர் சீத்தாராமன். அதுதான் இது நிஜமா? என்ற பெயரில் வெளியானது. நடிகர், கதாசிரியரான இவர் இதுபோல் பல ஆங்கிலப் படங்களை தமிழுக்கேற்ப மாற்றி கதை செய்திருக்கிறார். அப்படி நோபடிஸ் சைல்ட் திரைப்படத்தை தமிழுக்கேற்ப மாற்றி எழுதியதுதான் கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா திரைப்படம்.