1978 இல் வளர்ந்து வரும் நடிகர். சிவாஜி திரையுலகில் அனைத்து வெற்றிகளையும் ருசித்தவர். இவர்கள் இருவரும் ஜஸ்டிஸ் கோபிநாத் திரைப்படத்தில் முதல்முறையாக இணைந்து நடித்தனர். சங்கர் சலீம் சைமன், பைரவி, முள்ளும் மலரும் போன்ற வெற்றிப் படங்களும், கணிசமான தோல்விப் படங்களும் கொடுத்திருந்த நேரத்தில் சிவாஜியுடன் இணைந்து நடிக்கிற வாய்ப்பு ரஜினிக்கு கிடைத்தது. அதுவும் வளர்ப்பு மகனாக. நன்னு சந்திரா கதைக்கு வியட்நாம் வீடு சுந்தரம் திரைக்கதை எழுத, யோகானந்த் படத்தை இயக்கினார். கதையாகப் பார்த்தால் அன்றைய தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றதுதான்.
சிவாஜிதான் ஜஸ்டிஸ் கோபிநாத். நேர்மை தவறாதவர். அவர் பொய் சாட்சிகளால் முருகன் என்ற குற்றம் செய்யாத நபருக்கு தண்டனை தரும்படி ஆகிறது. முருகனின் மனைவி அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொள்ள, அவர்களது மகன் ரவியை தனது மகன் போல் வளர்க்க ஆரம்பிக்கிறார் ஜஸ்டிஸ் கோபிநாத். ரவியும் அப்பாவிடம் ஜுடோ கற்று ஸ்டைலும், சண்டையுமாக வளர்கிறான். வழக்கறிஞராகும் ரவிக்கு, சாதி கடந்து உமா என்ற பெண்ணிடம் காதல் ஏற்படுகிறது. இந்த நேரம் சிறையிலிருந்து முருகன் விடுதலையாகிறான். வெளியே வந்தவன் மனைவியின் தற்கொலையைக் குறித்து அறிகிறான். தொலைந்துபோன மகனை தேட ஆரம்பிக்கிறான்.
ஒருகட்டத்தில் ரவிதான் முருகனின் மகன் என்ற உண்மையை ஜஸ்டிஸ் கோபிநாத் சொல்ல வேண்டியதாகிறது. உமாவை ரவிக்கு திருமணம் செய்துத்தர உமாவின் தந்தை மறுக்கிறார். முன்பு முருகனை குற்றவாளியாக்கி சிறைக்கு அனுப்பியது உமாவின் தந்தை என்பது தெரிய வருகிறது. இந்த குழப்பங்களை கடந்து எப்படி உமாவும், ரவியும் சேர்ந்தார்கள் என்பது கதை.
படிப்பதற்கு சுவாரஸியமாக இருக்கும் கதையை திரையில் பார்க்கையில் அத்தனை சுவாரஸியம் இருப்பதில்லை. தங்கப்பதக்கம், கௌரவம் படங்களில் வரும் சிவாஜியைப் போல் ஜஸ்டிஸ் கோபிநாத் கதாபாத்திரத்தில் ஒரு கம்பீரமான சிவாஜியை ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதிலும் ஏமாற்றமே. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையும், பாடல்களும் இருந்தும் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியைத் தழுவியது.
ஜஸ்டிஸ் கோபிநாத் வெளியான ஆறு தினங்களில் ரஜினியின் ப்ரியா படம் வெளியாகி 175 தினங்கள் ஓடி ரஜினியின் முதல் வெள்ளி விழா திரைப்படமானது. சரியாக 42 தினங்களில் சிவாஜியின் 200 வது படம் திரிசூலம் வெளியாகி 175 தினங்களுக்கு மேல் ஓடி, இன்டஸ்ட்ரி ஹிட்டானது. ஜஸ்டிஸ் கோபிநாத்தை இயக்கிய யோகானந்த் இயக்கத்தில் அடுத்த வருடமே சிவாஜி, ரஜினி இணைந்து நடித்தனர். நான் வாழவைப்பேன் என்ற அந்தப் படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் தயாரித்தவர்களுக்கும், திரையிட்டவர்களுக்கும் லாபம் சம்பாதித்து தந்தது. 1978 ஆண்டு வெளியான ஜஸ்டிஸ் கோபிநாத் படம் தற்போது 44 வருடங்களை நிறைவு செய்துள்ளது.