பூங்குழலி, சேந்தன் அமுதன், ஆழ்வார்க்கடியான் போன்ற முக்கியமான கதைமாந்தர்கள் கல்கியின் கற்பனையில் உதித்தவர்கள். நாயக கதாபாத்திரமான வந்தியதேவன் வரலாற்றில் சிறிய அளவே இடம்பெறும். கல்கி அதனை விரித்து எழுதியிருப்பார். எப்படிப் பார்த்தாலும் தமிழ், தமிழர் நிலப்பரப்பு கடந்து மற்றவர்கள் சொந்தம் கொண்டாட இதில் எதுவும் இல்லை. பிறகேன் இந்த சர்ச்சை?
தமிழ்நாட்டில் புதுச்சேரி, பொள்ளாச்சியில் வெறும் பத்து நாள்களே படப்பிடிப்பு நடந்தது. மீதி முழுக்க இங்கே ராஜமுந்திரி, ஹைதராபாத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது. ஆகவே, இது உங்களின் படம்... பொன்னியின் செல்வன் உங்களின் படம்... நீங்கள் ஆதரிக்க வேண்டும்" எனப் பேசினார். இதுதான் இப்போது சர்ச்சையாகியுள்ளது.
சுஹாசினி ஒருபுறம் இப்படி பேசுகையில் படத்தின் திரைக்கதையாசிரியர் ஜெயமோகன், சோழர்கள் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்தவர்கள். செங்கிஸ்தானின் பெருமையைச் சொல்ல சீன அரசே படம் தயாரிக்கிறது. பொன்னியின் செல்வன் மூலம் சோழர்களின் வரலாறு உலகம் முழுவதும் தெரியவரும், அதனால் படத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என பேசியும் எழுதியும் வருகிறார்.
பொன்னியின் செல்வனை கனவாக மனதில் சுமந்து, அதனை படமாக்கியிருக்கும் மணிரத்னம் இதுபோல் எந்த சர்ச்சைக் கருத்தையும் உதிர்க்காமல் எப்போதும் போலிருக்கிறார். ஜெயமோகன் சொல்வது போல் சோழர்களின் பெருமையை உலகறியச் செய்யத்தான் மணிரத்னம் பொன்னியின் செல்வனை எடுத்தாரா? ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக நாள் படப்பிடிப்பு நடத்தியதால் சுஹாசினி சொல்வது போல் அது தெலுங்கர்களின் சினிமாவா?
ஒரு திரைப்படம் என்பது பலநூறு பேர்களின் கூட்டு உழைப்பில் உருவாவது. பொன்னியின் செல்வனில் கூடுதலாக பலநூறு கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மொழி, இனம், தேசங்களை கடந்து அப்படம் சென்றால் மட்டுமே போட்ட பணத்தை திருப்பியெடுக்க முடியும். இதற்காக விளம்பர நிகழ்ச்சிகள் நடத்துவது அவசியம். படத்தின் சிறப்புகளைச் சொல்லி மக்களை கவரலாம்.