ஜெயலலிதாவின் முதல் படம் வெண்ணிற ஆடை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா நாயகியாக அறிமுகமான படம்தான் வெண்ணிற ஆடை. அதற்கு முன் சில படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். ஜெயலலிதா தமிழில் நாயகியாக அறிமுகமான படம்தான் வெண்ணிற ஆடை. அதற்கு முன் கன்னடத்தில் கதாநாயகியாக சில படங்களில் நடித்திருந்தார். வெண்ணிற ஆடை அதற்குப் பிறகே வெளியானது.
ஜெயலலிதா 1961 ஆம் ஆண்டு, தனது 12 வது வயதில் ஸ்ரீ ஷைலா மகாத்மே என்ற கன்னட திரைப்படத்தில் சிறுமி பார்வதியாக நடித்தார். பார்வதி என்றால், சிவனின் மனைவி, சக்தியின் வடிவம். இதற்கு அடுத்த வருடம் இந்தியில் தயாரான மேன் மௌஜி என்றப் படத்தில் கிருஷ்ணராக தோன்றினார். அதற்கு அடுத்த வருடம் 1963 இல் தெலுங்கில் தயாரான கான்ஸ்டபிள் கூட்டுரு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். 1964 இல் அமர சிப்பி ஜக்கன்னா தெலுங்குப் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்தார். இதிலும் அவருக்கு நடன மங்கை வேடம். இந்தப் படம் கன்னடத்திலும் வெளியானது.
ஜெயலலிதாவின் நடனத் திறமையைக் கண்ட இயக்குனர் பி.ஆர்பந்துலு அவரை தனது கன்னட திரைப்படம் சின்னட கொம்பி யில் இரண்டாவது நாயகியாக அறிமுகப்படுத்தினார். கல்யாண் குமார், கல்பனா பிரதான வேடங்களில் நடித்தனர். இந்தப் படம் கன்னடம், தமிழ் இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரானது. தமிழில் சிவாஜி, தேவிகா நடிப்பில் 1964 ஆம் ஆண்டு, நவம்பர் 3 ஆம் தேதி முரடன் முத்து என்ற பெயரில் வெளியானது. அதற்கு அடுத்த நாள் 4 ஆம் தேதி கன்னடப் படம் திரைக்கு வந்தது.
சின்னட கொம்பி படத்தில் ஏற்பட்ட நட்பால் கல்யாண் குமாரின் இரு படங்களில் ஜெயலலிதா தொடர்ந்து நாயகியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து 1965 ஏப்ரல் 14 அவர் தமிழில் நாயகியாக நடித்த ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை வெளியானது. இதனைத் தொடர்ந்து நான்கே மாதங்களில் ஜெயலலிதா நாயகியாக நடித்த முதல் தெலுங்குப் படம் மனசுலு மமதலு வெளியானது. இந்தப் படம்தான் தெலுங்கு திரைச்சரித்திரத்தில் முதல்முறை 'ஏ' சான்றிதழ் பெற்ற திரைப்படமாகும். தமிழில் முதல்முறை 'ஏ' சான்றிதழ் பெற்ற திரைப்படம் எம்ஜிஆர் நடித்த மர்மயோகி என்பது முக்கியமானது.
மர்மயோகி படத்தில் பேயாக ஒருவர் தோன்றுவார். அதனை காரணம் காட்டி 'ஏ' சான்றிதழ் அளித்தனர். அதுபோல் சாதாரணமான காரணத்தை வைத்தே மனசுலு மமதலு படத்திற்கும் 'ஏ' சான்றிதழ் தந்திருக்க வேண்டும். இந்தப் படத்தை மூன்று தேசிய விருதுகளை வென்ற பிரத்யாக்த்மா இயக்கினார். நாகேஸ்வரராவ், சாவித்ரி, ஜெயலலிதா பிரதான வேடங்களில் நடித்தனர். நாகேஸ்வரராவை சாவித்ரி காதலித்தாலும், 'நீ எனக்கு நல்ல ப்ரெண்ட் மட்டுமே' என்று அவரது காதலை நாகேஸ்வரராவ் நிராகரித்துவிடுவார். பிறகு ஜக்கையாவுக்கும், சாவித்ரிக்கும் திருமணம் நிச்சயமாகும். நாகேஸ்வரராவை ஜெயலலிதாவும் காதலிப்பார். நாகேஸ்வரராவுக்கும் அவர் மீது காதல் தோன்றும். சாவித்ரியை மணக்க நினைக்கும் ரவுடி பிரபாகர் ரெட்டி ராஜஸ்ரீயின் துணையுடன் சாவித்ரி - ஜக்கையா ஜோடியை பிரிக்க நினைப்பார். அவர்களின் சதியை நாகேஸ்வரராவ் ஜெயலலிதாவின் துணையுடன் முறியடிப்பார்.
குழந்தை நட்சத்திரமாகவும், நாயகியாகவும் ஜெயலலிதா அறிமுகமானது கன்னடப் படத்தில். எனினும் அவர் தமிழ், தெலுங்கு மொழிகளில்தான் தொடர்ச்சியாக நடித்தார். கன்னடத்தில் நடிக்கவில்லை. கடைசிவரை நல்ல வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் தெலுங்கில் நடிக்க அவர் தவறியதில்லை. தெலுங்கு திரையுலகம் தமிழ் அளவுக்கு அவருக்குப் பிடித்தமானதாக இருந்தது. தமிழின் முதல் 'ஏ' சான்றிதழ் படத்தில் எம்ஜிஆரும், முதல் தெலுங்கு 'ஏ' சான்றிதழ் படத்தில் ஜெயலலிதாவும் நடித்திருப்பது ஆச்சரியமான ஒற்றுமை.