இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவுக்கு இணையாக படத்தில் உழைத்தவர் ஒளிப்பதிவாளர் கௌரிசங்கர். கன்னடர். கமல் அழைத்ததற்காக வந்து ஒளிப்பதிவு செய்தார். மைக்கேல் மதன் காமராஜன் படமாக்கப்பட்ட போது கௌரிசங்கர் அவரது பிற வேலைகளுக்காக பெங்களூரில் மாட்டிக் கொள்ள படத்தின் கதை பெங்களூரில் நடப்பதாக வைத்து, அங்கேயே படப்பிடிப்பை நடத்தினர்.
மைக்கேல் மதன் காமராஜனில் ஒரு காட்சியில் இரண்டு கமல்கள், மூன்று கமல்கள், சிலநேரம் நான்கு கமல்கள் தோன்றுவார்கள். இரண்டு கமல் என்றால் ஒரே காட்சியை இரண்டுமுறை படமாக்க வேண்டும். மூன்று கமல் என்றால் மூன்றுமுறை. நான்கு என்றால் நான்கு முறை. கிளைமாக்ஸில் நான்கு கமல்களும் எல்லா காட்சிகளிலும் இருப்பார்கள். அப்படியானால் நான்கு... நான்கு... நான்கு... என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு படத்துக்கு நான்கு படங்களுக்கான காட்சிகளை படமாக்கினார்கள். அத்தனை உழைப்பு.
நான்கு கமல்களுக்கும் நான்குவிதமான பின்னணி தரப்பட்டிருக்கும். ஒருவர் பாலக்காட்டு ஐயர். சைவ சமையல்காரர். அவருக்கு ஜோடி ஊர்வசி. இன்னொரு கமல் கிரிமினல். வளர்ப்பு தந்தை சந்தான பாரதி. மூன்றாவது அனாதையான தீயணைப்புத்துறை வீரன். காதலியாக குஷ்பு. நான்காவது பணக்கார மதன். காதலி ரூபிணி. ஒவ்வொருவருக்கும் தனித்தனி உச்சரிப்பு, மேனரிசம்.
இளையராஜா இசையமைத்ததில் ஒரு பாடல் (ஆடி பட்டம்) படத்தில் இடம்பெறவில்லை.. டைட்டில் பாடலில் முன் கதையை அமர்க்களமாக சொல்லியிருப்பார் பஞ்சு அருணாச்சலம். சுந்தஜா நீயும் சுந்தரி நானும் பாடலை 48 பிரேம்களில் படமாக்கியிருப்பார்கள். பொதுவாக 24 பிரேமில்தான் காட்சிகள் படமாக்கப்படும். ஸ்லோமோஷனில் காட்சிகள் வரும்போது, சாதாரணமாக பாடலை பாடினால் மேட்ச் ஆகாது. வேகமாக பாடலை பாட வேண்டும். அப்போதுதான் ஸ்லோமோஷனில் பாடலுக்கான உதட்டசைவு மேட்ச் ஆகும். அப்படித்தான் ஊர்வசியும், கமலும் பாடி நடித்தார்கள்.