சிவாஜி, கே.ஆர்.விஜயா, பிரமிளா அமர்ந்திருக்கும் இந்தப் புகைப்படம் தமிழ் சினிமா சரித்திரத்தில் முக்கியமானது. தமிழ் சினிமா வசூல் என்று எடுத்துக் கொண்டாலும், கம்பீர நடிப்பு என எடுத்துக் கொண்டாலும் இந்தப் படத்தைத் தவிர்ப்பது கடினம். மகேந்திரனின் கதை, வசனத்தில் உருவான தங்கப்பதக்கம் படத்தின் வெற்றி விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
இயக்குனர் மகேந்திரன் இரண்டில் ஒன்று என்ற பெயரில் ஒரு நாடகத்தை எழுதினார். அது நடிகர் செந்தாமரைக்காக எழுதப்பட்ட நாடகம். செந்தாமரை நடிப்பில் அந்த நாடகம் சென்னையில் அரங்கேறி பல மேடைகள் கண்டது. ஒருமுறை அந்த நாடகத்தை காணும் வாய்ப்பு சிவாஜிக்கு கிட்டியது. நாடகம் அவரை பெரிதும் கவர்ந்தது. அதன் பிரதான வேடம் தனக்காகவே உருவாக்கப்பட்டதைப் போல் அவர் உணர்ந்தார்.
நாடகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விஐபிகள் அனைவரும் நாடகத்தை கண்டுகளித்தனர். 100 முறைக்கு மேல் மேடையேறிய பிறகு, நாடகத்தை திரைப்படமாக்க விரும்பினார் சிவாஜி. அவரது சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் மாதவன் இயக்கத்தில் நாடகத்தை திரைப்படமாக்குவது என முடிவானது. நாடகத்தை எழுதிய மகேந்திரனே படத்திற்கு வசனம் எழுதினார். கதைக்கான கிரெடிட்டும் அவருக்கு தரப்பட்டது.
நேர்மை தவறாத எஸ்.பி.சௌத்ரியாக சிவாஜியும், அவரது மனைவி லட்சுமியாக கே.ஆர்.விஜயாவும் இவர்களின் ஒரே மகன் ஜெகனாக சுதாகரும் நடித்தனர். ஸ்ரீகாந்தின் மனைவி விமலாவாக பிரமிளா நடித்தார். இவர்கள் தவிர மேஜர் சுந்தர்ராஜன், விகே ராமசாமி, சோ, ஆர்.எஸ்.மனோகர், மனோரமா, சுருளிராஜன், புஷ்பமாலா, வி.ஆர்.திலகம், வீரராகவன், உசிலைமணி ஆகியோரும் நடித்தனர். எம்எஸ்வியின் இசைக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதினார்.
கடமை தவறாத போலீஸ் அதிகாரி, தேசவிரோதமாக செயல்படும் மகனை சுட்டுக் கொன்று தங்கப்பதக்கம் பெறும் கதையிது. இன்றைக்கு சரியாக 48 வருடங்களுக்கு முன் 1974 ஜுன் 1 ஆம் தேதி தங்கப்பதக்கம் வெளியானது. அன்றிலிருந்து இப்போதுவரை போலீஸ் அதிகாரி என்றால் தங்கப்பதக்கம் சிவாஜியின் எஸ்பி சௌத்ரி கதாபாத்திரம்தான் மனக்கண்ணில் வரும். அந்தளவுக்கு அந்த கதாபாத்திரத்தை தனது கம்பீரத்தால் உயர்த்திருப்பார் சிவாஜி.
அன்றைய தமிழக ஐஜி எஃப்.சி.அருள், தங்கப்பதக்கம் திரைப்படத்தை 16 எம்எம் மில் அனைத்து காவல்நிலையத்திலும் திரையிட முயற்சி எடுத்து, அனைத்து கால்துறையினரும் படத்தைப் பார்க்க வழி செய்தார். இன்று தங்கப்பதக்கத்தை வெளியிட்டாலும் புதிய படங்களுக்கு சவால்விடும் அளவுக்கு ஓடக்கூடிய திராணி அப்படத்திற்கு உண்டு.
செந்தாமரைக்காக எழுதப்பட்டு, அவரது நடிப்பில் அரங்கேறிய நாடகத்தில், தனக்கு பெயர் வாங்கித் தரும் கதாபாத்திரமும், கதையும் இருப்பதை சிவாஜி கண்டு கொண்டதே தங்கப்பதக்கம் திரைப்படமாக உருவாக பிரதான காரணம். மார்லன் பிராண்டே முதல் சிவாஜிவரை முன்னணி நடிகர்கள் அனைவரிடமும் நடிப்பைத் தாண்டி எது தனக்கு சரிவரும் என்ற கணிப்பும் இருந்திருக்கிறது. பல தடைகளை கடந்து அவற்றை திரையிலும் கொண்டு வந்திருக்கின்றனர்.
தங்கப்பதக்கம் படத்தின் 100 வது நாள் வெற்றியை குடந்தை கற்பகம் திரையரங்கில் கொண்டாடினர். படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. அந்த கேடயத்துடன் சிவாஜி, கே.ஆர்.விஜயா, பிரமிளா அமர்ந்திருக்கும் புகைப்படம்தான் நீங்கள் பார்த்தது. இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் தங்கப்பதக்கத்தின் வெற்றி உரக்க ஒலித்துக் கொண்டே இருக்கும்.