மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சுந்தர் சி, 27 வருடங்களுக்கு முன் தனது முதல் படத்தை இயக்கினார். நகைச்சுவை கலந்த அந்த கிராமத்துப் படத்தில் சரத்குமார் நடித்தால் நன்றாக இருக்கும் என சுந்தர் சி. விரும்பினார். ஆனால், தயாரிப்பு நிறுவனத்தால் சரத்குமாரின் கால்ஷீட்டை பெற முடியவில்லை. அதனால், மலையாள நடிகர் ஜெயராமை நாயகனாக்கி படத்தை இயக்கினார். அந்தப் படம், முறை மாமன். 1995 மே 19 ஆம் தேதி முறை மாமன் வெளியானது.
கிராமத்தின் பெரிய தலைக்கட்டு ஜெயராமின் குடும்பம். அம்மா மனோரமா. அண்ணன் கவுண்டமணி. செந்தில் வேலைக்காரர். வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்த கவுண்டமணி, ஜெயராமின் ஒரே சகோதாரி 20 வருடங்களுக்குப் பிறகு தனது மகளுடன் (குஷ்பு) கிராமத்துக்கு வருகிறார். குடும்ப மானத்தை வாங்கிய சகோதரியை எப்படியும் ஓட்டிவிட வேண்டும் என்பது அண்ணன், தம்பியின் திட்டம்.
முறைப்பெண் குஷ்புவைப் பார்த்ததும் ஜெயராமின் மனம் மாறுகிறது. குஷ்புவிடம் ஜொள்ளுவிட ஆரம்பிக்கிறார். குஷ்புவும் வேண்டும், அண்ணன் கவுண்டமணியின் கோபத்துக்கும் ஆளாகக் கூடாது. இந்த இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொள்வார் ஜெயராம். இவர்கள் குஷ்புவையும் அவரது குடும்பத்தையும் ஓட்டுவதற்கு எடுக்கும் முயற்சிகளும், அது பிசுபிசுத்துப் போவதும் நகைச்சுவையுடன் எடுக்கப்பட்டிருந்தது. படம் பி அண்ட் சியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
நகைச்சுவையுடன் ஒரு கதையைச் சொல்லும் போது அனைவரும் ரசிப்பார்கள் என்பது சுந்தர் சி.யின் நம்பிக்கை. அது உண்மை என்பதை இன்றுவரை தனது படங்கள் மூலம் நிரூபித்து வருகிறார். காதல், ஆக்ஷன், த்ரில்லர் என பலவகைப் படங்களை சுந்தர் சி. எடுத்தாலும் அதில் ஹைலைட்டாக இருப்பது நகைச்சுவை. சுந்தர் சி. யின் இன்னொரு பலம், தனது திறமை எத்தகையது என்று புரிந்து வைத்திருப்பது. மிகப்பெரிய இயக்குனராக வேண்டும் என்று அவர் கூறியது இல்லை. மினிமம் கியாரண்டி இயக்குனராக வேண்டும் என்பதே அவரது விருப்பம்.
சுந்தர் சி. படம் இயக்கினால் கையை கடிக்காது என்று தயாரிப்பாளரும், போரடிக்காது என்று ரசிகர்களும் நம்புவதே அந்த மினிமம் கியாரண்டியின் நோக்கம். ஒருசில படங்கள் தவிர்த்து இந்த இரண்டையும் அவரது படங்கள் இன்றுவரை தக்க வைத்துள்ளன. இந்த வெற்றி ஃபார்முலாதான் அவருக்கு ரஜினியை வைத்து அருணாச்சலமும், கமலை வைத்து அன்பே சிவமும் இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றுத் தந்தது.
சுந்தர் சி. சினிமாக்களின் நோக்கம் ஒன்றே, ரசிகர்களை என்டர்டெயின் செய்வது. இதனால் திரைப்பட ஆக்கத்தில் அவர் பெரிதாக மெனக்கெடுவதில்லை. உதாரணமாக, ஒரு காட்சி இரவில் நடக்கிறது என்றால், ஏன் அது இரவில் நடக்க வேண்டும், பகலில் நடந்தால் என்ன என்று கேட்டு, முடிந்தவரை பகலில் அந்தக் காட்சியை எடுக்கப் பார்ப்பார். தவிர்க்கவே முடியாது என்றால் தான் அவரது படத்தில் இரவுக் காட்சி வரும்.
படத்தின் கதைக்கும் இரவுக் காட்சி அளவுக்கே சுந்தர் சி. மெனக்கெடுவார். பழைய தமிழ்ப் படங்கள், மலையாளப் படங்கள், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என்று எந்த மொழிப் படத்திலும் இன்ஸ்பயராகி புதிய படம் ஒன்றை எடுத்துவிடும் வல்லமைமிக்கவர். தலைநகரம் படத்தில் நாயகனாக அறிமுகமாகி பல வருடங்கள் இயக்கத்திலிருந்து விலகி இருந்துவிட்டு மீண்டும் கலகலப்பு படத்தின் மூலம் இயக்கத்துக்கு திரும்பிய போது, ஜெர்மன், சோல் கிச்சன் திரைப்படம்தான் அவருக்கு கை கொடுத்தது. அதன் கதையை எடுத்துக் கொண்டு, தனது பாணியில் நகைச்சுவை காட்சிகளை வைத்து கலகலப்பு படத்தை எடுத்து, ஹிட்டாக்கிக் காட்டினார். பிற படங்களின் கதையில், காட்சிகளில், நகைச்சுவை துணுக்குகளில் எப்படி இன்ஸ்பையர் ஆவது, எப்படி அதனை மாற்றி எடுத்து ரசிகர்களை சிரிக்க வைப்பது என்பதை கற்றுக் கொள்ள சுந்தர் சி.யின் படங்கள் பெரிதும் உதவும்.
ஒரு ஆக்ஷன் படம் எடுத்துப் பார்க்கலாம் என ஆக்ஷன் என்ற பெயரிலேயே விஷாலை வைத்து ஒரு படம் எடுத்தாரே... அதுதான் அவரது அதிகபட்ச வித்தியாசம். அதைவிட அவரது வழக்கமான நகைச்சுவை கலந்த படங்கள் எடுத்தால் ரசிகர்கள் இரண்டு மணி நேரம் சிரித்துவிட்டுச் செல்வார்கள். அந்தவகை படங்கள் எடுக்க இப்போதும் சுந்தர் சி.தான் இருக்கிறார் என்பதுதான் அவருக்கான முக்கியத்துவம். அதுதான் இத்தனை வருடங்களில் அவர் தமிழ் சினிமாவில் தனக்கென உருவாக்கிய இடமும்.