விக்ரமன் வேதாளம் கதையில், இதேபோல் ஒரு கதை வரும் அப்பாவும், மகனும் இரு காலடித்தடங்களைப் பார்ப்பார்கள். ஒன்று பெரிதாகவும், இன்னொன்று சிறிதாகவும் இருக்கும். பெரிய காலடித்தடத்துக்குரியவளை அப்பாவும், சிறிய காலடித்தடத்துக்குரியவளை மகனும் மணப்பது என்று முடிவு செய்து அந்தக் காலடித்தடங்களை பின்தொடர்வார்கள். கடைசியில் பார்த்தால் பெரிய காலடித்தடத்துக்குரியவள் மகளாகவும், சிறிய காலடித்தடத்துக்குரியவள் தாயாகவும் இருப்பார்கள். ஏற்கனவே பேசியபடி அப்பா மகளையும், மகன் அம்மாவையும் மணந்து கொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உறவு என்ன என்று வேதாளம் கேட்கும்.
இந்தக் கதையை அடிப்படையாக வைத்தே அபூர்வராகங்கள் கதையை எழுதியதாக பாலசந்தர் வாதிட்டார். படத்தை பார்த்த நீதிபதி, கண்ணதாசன் இதழில் வெளிவந்த என்.ஆர்.தாசனின் வெறும் மண் கதையையும் படித்துவிட்டு, என்.ஆர்.தாசனின் கதையே அபூர்வராகங்கள் என தீர்ப்பளித்து, பாலசந்தருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். கதை என்னுடையது என்ற தீர்ப்பு போதும், பணம் வேண்டாம் என்று என்.ஆர்.தாசன் கூறியதை ஏற்க மறுத்த நீதிபதி, பணத்தை வாங்கி அவரிடம் அளித்தார்.
இதுபோன்ற ஒரு கதைச் சர்ச்சை 1967-லும் நடந்தது. அப்போது பாலசந்தர் இயக்கத்தில் பாமா விஜயம் திரைப்படம் வெளியானது. டி.எஸ்.பாலையா ஓய்வு பெற்ற ஆசிரியர். அவருக்கு மூன்று மகன்கள் முத்துராமன், நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன். மூவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கும். மேஜர் சுந்தர்ராஜனின் மனைவி சௌகார் ஜானகி. முத்துராமனின் மனைவி காஞ்சனா, நாகேஷின் மனைவி ஜெயந்தி. மேஜர் சுந்தர்ராஜனுக்கு ஐந்து குழந்தைகள், முத்துராமன் தம்பதிக்கு இரண்டு, இவர்களுடன் காஞ்சனாவின் தங்கை சச்சுவும் அவர்கள் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருப்பார். மிகப்பெரிய கூட்டுக் குடும்பம், பக்கத்து வீட்டில் பிரபல நடிகை பாமா (ராஜஸ்ரீ) குடியேறும் போது கூட்டுக்குடும்பத்தின் லயம் மாறிப்போகும்.
பாமாவை கவர, இந்த வீட்டின் மருமகள்கள் போட்டிப் போட்டு ஆடம்பரப் பொருள்களாக வாங்கிக் குவிப்பார்கள். மகன்கள் பாமாவுக்கு ரூட் விடுவார்கள். வீட்டின் தலைவர் பாலையாவின் அறிவுரையை யாரும் கேட்க மாட்டார்கள். கடன் பெருகும். மகன்கள் மூவரும் பாமாவை கவர திட்டமிடுவார்கள். இவர்களைத் திருத்த பாலையா மேற்கொள்ளும் நடவடிக்கை பெரும் குழப்பத்தை உருவாக்கி சுபத்தில் முடிவது கதை.
பாமா விஜயத்தை, ஏ லெட்டர் டு த்ரீ வைவ்ஸ் என்ற படத்திலிருந்து பாலசந்தர் எடுத்துக் கொண்டதாக கூறப்பட்டது. 1949 இல் வெளிவந்த இந்தப் படத்தில் இதேபோல் மூன்று மனைவிகள், மூன்று கணவன்கள். அவர்களுக்கு ஒரு கடிதம் வரும். மூன்று கணவன்களில் ஒருவர் இன்னொரு பெண்ணுடன் ஓடிப்போவதாக. பெயர் குறிப்பிடாததால் மூன்று மனைவிகளும் குழம்பிப் போவார்கள்.
பாமா விஜயத்திலும் அப்படியொரு கடிதம் வரும். மூன்று கணவன்களில் ஒருவர் பாமாவுடன் தொடர்பில் இருப்பதாக. பாலையாவே அதனை எழுதியிருப்பார். ஆகவே, பாமா விஜயம் இந்த ஆங்கிலப்படத்தின் தழுவல் என்றனர். கே.கே.ராமன் எழுதிய ஸ்டார் நைட் நாடகத்தை தழுவி பாமா விஜயத்தை பாலசந்தர் எடுத்ததாகவும் அந்த நேரத்தில் சர்ச்சை எழுந்தது.
பாலசந்தர் சினிமாவில் அறிமுகமாகியிருந்த நேரத்தில் ஒருமுறை சௌகார் ஜானகி அவரது வீட்டிற்கு வருகை தந்த போது அவரது வீட்டிலும், பக்கத்தில் உள்ளவர்களிடமும் ஏற்பட்ட மாற்றத்தை வைத்து பாமா விஜயம் கதையை எழுதியதாக அவர் குறிப்பிட்டார். இதில் எது உண்மையாக இருப்பினும், பாமா விஜயம் ஒரு நல்ல நகைச்சுவைப் படம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.