பாடகர், நடிகர் சந்திரபாபு 1974 மார்ச் 3 ஆம் தேதி மரணமடைந்தார். திரையில் மக்களை மகிழ்வித்த சந்திரபாபுவின் இறுதிக்காலம் சோகமானதாக அமைந்தது. சந்திரபாபுவின் தந்தை ரோட்ரிக்ஸ் சுதந்திரப் போராட்ட வீரர். சந்திரபாபு யில் பிறந்தார். அவருக்கு தந்தை வைத்த பெயர் ஜோசப் பனிமயதாசன் ரோட்ரிக்ஸ். அப்பெயர் எப்படி ஜே.பி.சந்திரபாபுவாக மாறியது என்பது யாருக்கும் தெரியவில்லை.
சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறை எழுதியிருக்கும் ஆசிரியரும், சந்திரபாபு என்ற பெயர் எப்படி வந்தது என்பது தெரியவில்லை என்கிறார். 1947 இல் வெளியான பி.எஸ்.ராமையாவின் அமராவதி படத்தில் சந்திரபாபு அறிமுகமானார். அந்தப் படத்தில் அவர், உன்னழகிற்கு இணை என்னதை சொல்வது... என்ற ஒரு பாடலையும் பாடியிருந்தார். எம்ஜிஆர், சிவாஜி கோலோச்சியிருந்த திரையுலகில் நகைச்சுவை நடிகராக நுழைந்த சந்திரபாபு அவர்களுக்கு இணையான வரவேற்பை பெற்றார்.
முற்போக்குச் சிந்தனையும், கலைஞர்களுக்குரிய அசாதாரண வெளிப்பாடும் ஒருங்கே பெற்ற சந்திரபாபுவின் நடவடிக்கைகள் லௌகீக வாழ்வுக்கு இயைந்ததாக இருக்கவில்லை. 1958 இல் நடந்த திருமணமும் அவருக்கு நிலைக்கவில்லை. திருமணமான அன்று முதலிரவின் போது, தனது மனைவிக்கு வேறொரு காதலன் இருப்பதை அறிந்து கொண்ட சந்திரபாபு அவரை தனது காதலனுடன் இணைத்து வைத்ததாக ஒரு தகவல் இன்றளவும் உலாவுகிறது.
சந்திரபாபுவின் கதையில் இன்ஸ்பயர் ஆகி அந்த 7 நாள்கள் திரைப்படத்தை எடுத்ததாக பாக்யராஜ் கூறியிருந்தது சந்திரபாபு கதைக்கு வலு சேர்த்தது. ஆனால், அது தவறு. சந்திரபாபு அவரது மனைவியுடன் பெங்களூருக்கு தேன்நிலவுக்கு சென்றார். ஆறு மாதங்கள் இருவரும் குடும்பம் நடத்தினர். தனது மனைவி மகிழ்ச்சியாக இல்லை, தனது பழைய காதலனின் நினைவில் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்ட சந்திரபாபு அவர் தனது காதலனுடன் சேரும்பொருட்டு அவரைவிட்டு பிரிந்தார்.
சந்திரபாபுக்கு போதைப் பழக்கம் இருந்தது. அத்துடன் அவர் நாயகனாக நடித்த தட்டுங்கள் திறக்கப்படும் படமும் தோல்வியடைய, கடன்கள் அவரை நெருக்கத் தொடங்கியது. இவற்றிலிருந்து மீளும் பொருட்டு எம்ஜிஆரை வைத்து மாடி வீட்டு ஏழை படத்தை தயாரித்தார். சந்திரபாபு மீது அத்தனை இயைமை கொண்டவரல்ல எம்ஜிஆர். பல காரணங்கள் சொல்லி படப்பிடிப்புக்கு வருவதை எம்ஜிஆர் தட்டிக்கழித்தார். அவர் ஒருபோதும் படத்தை முடித்துத் தரப்போவதில்லை என்பதை அறிந்த சந்திரபாபு, எடுத்த காட்சிகளை தீயிட்டு கொளுத்தினார். கடனுக்காக கோர்ட் அவரது வீட்டை ஜப்தி செய்தது.
கிரீன்வேயிஸ் சாலையில் 20 கிரவுண்டில் அமைந்த அந்த வீட்டை, கார் முதல் மாடிக்கு செல்லும்படி சந்திரபாபு கட்டியிருந்தார். அவரது கனவு இல்லம் கைவிட்டுப் போனது அவரை நிலைகுலைய செய்தது. வறுமையும், போதையும் சந்திரபாபுவை 1974 இல் இவ்வுலகில் இருந்து எடுத்துக் கொண்டன. சூதாட்டமாகிப்போன சினிமா தயாரிப்பும், போதையும்;, பெண்கள் சகவாசமும் கொண்ட சினிமா ஜாம்பவான்கள் பலரும் தப்பிப் பிழைத்திருக்கிறார்கள். அவர்களின் சாமர்த்தியமும், சமத்கார செயல்களும் அவர்களை காப்பாற்றியிருக்கின்றன. சந்திரபாபு அத்தகைய சாமர்த்தியம் இல்லாதவர், மாட்டிக் கொண்டார். எனினும், தனது திறமைகளின் வழியாக அவர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.