அரசு திரைப்படம் 2003 இல் வெளியானது. திருநாவுக்கரசு, பெரியவர் நடராஜன் என்ற இரு வேடங்களில் சரத்குமார் நடித்திருந்தார். பெரியவருக்கு ஜோடியாக ரோஜாவும், திருநாவுக்கரசுக்கு ஜோடியாக சிம்ரனும் நடித்திருந்தனர். வடிவேலு பிரதான நகைச்சுவை நடிகர். கோவில் பணிக்காக அக்ரஹார தெருவில் திருநாவுக்கரசாகிய இளைய சரத்குமார் குடியேறுவார். அவரது வருகை வடிவேலுக்குப் பிடிக்காது. இறுதியில், அரசு வேலை கிடைத்து அக்ரஹாரத்தைவிட்டு கிளம்புவார்.
இரண்டுக்கும் இடையில் நிறைய நகைச்சுவைக் காட்சிகள் வரும். அதில் ஒன்று, பத்து மாமி நகைச்சுவை.வடிவேலுவை ஒரு கூட்டம் அடிப்பதற்கு துரத்திக் கொண்டு வரும். எதிரில் சரத்குமார்வர அவர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கும். சரத்குமார் காரணம் கேட்பார். மாமிக்கு உடம்பு சரியில்லை, காய்ச்சல். நெற்றியில் பத்து போட்டால் சரியாகும் என்றார்கள். பத்து போட்டேன். காய்ச்சல் போய்விட்டது. ஆனால், அடிக்கத் துரத்துகிறார்கள் என்பார் வடிவேலு.
நல்லதுதானே பண்ணியிருக்கான் என்பார் சரத்குமார். பிறகுதான் அந்த மாமியை இழுத்து வந்து முக்காடை விலக்கிக் காண்பிப்பார்கள். நெற்றில் 10 என்று எழுதியிருக்கும். நெற்றியில் பத்து (மருந்து) போடச் சொன்னதை தவறாகப் புரிந்து 10 என்று எழுதியிருப்பார். எழுதியதை அழிக்க முடியலை. பட்டு மாமின்னு கூப்பிட்டிருந்தவங்க இப்போ பத்து மாமின்னு கூப்பிடுறாங்க என மாமி புலம்புவார். வடிவேலு அதற்கு, நெற்றியில் நீண்ட குறியுடன் வருகிறவரை காட்டி, அவர் நுற்றி பதினொண்ணை நெற்றியில எழுதிட்டு தைரியமா நடக்கிறப்போ, நெத்தியில பத்தோடு இருக்கக் கூடாதா என்பார்.
இந்த நகைச்சுவை 67 வருடங்களுக்கு முன் 1955 இல் வெளியான நல்ல தங்காள் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது. ஏகே.வேலன், கதை, திரைக்கதை, வசனம் எழுத, பி.வி.கிருஷ்ண ஐயர் இயக்கிய படம் நல்ல தங்காள். ஆர்.எஸ்.மனோகர், ஜி.வரலட்சுமி, ஏ.பி.நாகராஜன், மாதுரிதேவி, சந்திரபாபு, வி.எம்.ஏழுமலை, இ.வி.சரோஜா உள்பட பலர் நடித்திருந்தனர். இதில் சந்திரபாபுவின் மாமாவாக ஏழுமலை நடித்திருந்தார். அவரது மகள் இ.வி.சரோஜா. அவர் மீது சந்திரபாபுக்கு மையல். ஒருமுறை மாமா வீட்டிற்கு வருகையில் சந்திரபாபுக்கு காய்ச்சல் அடிக்கும்.
பத்து போட்டால் சரியாகிவிடும் என்பார் சரோஜா. மாமன் மகளே பத்து போடப் போகிறாள் என்று சந்திரபாபு கிறக்கமாக அமர்ந்திருப்பார். மருந்தால் பத்திடுவதற்குப் பதில், அரசு படத்தில் வடிவேலு செய்தது போல் பத்து என்று மையால் நெற்றியில் எழுதுவார் சரோஜா. போட்டது மருந்தா இல்லையா என்பது சந்திரபாபுக்கு தெரியாது. போட்டது முறைப்பெண் என்பதால் காய்ச்சல் நீங்கிய கிற்கத்துடன் எழுந்து செல்வார்.
1955 இல் வந்த படத்தின் காட்சியை காப்பியடித்தார்கள் என்று தீர்மானமாக சொல்ல முடியாது. அரசு படத்தை உருவாக்கியவர்களுக்கு தன்னிச்சையாகவே இந்த காமெடிக் காட்சி தோன்றியிருக்கலாம். பழைய படங்களை ஆழமாகப் பார்த்தால் அதிலிருந்து உருவப்பட்ட கதைகள், காட்சிகள், வசனங்கள் என ஏராளமானவற்றை கண்டுபிடிக்கலாம். அரசு படம் குறித்து இன்னொரு தகவல்.
அரசு படம் தயாரான போது, அந்தப் பெயரை வேறொரு நிறுவனம் பதிவு செய்திருந்ததால், பெயரை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. ஏற்கனவே பெயரை பதிவு செய்திருந்த நிறுவனம் பெயரை விட்டுத்தர மறுத்தது. இதனைத் தொடர்ந்து எங்கள் படத்தின் பெயர் அரசு அல்ல, அரசு தர்பார் என்று பதிவு செய்து, அரசு என்பதை பெரிதாகவும், தர்பார் என்பதை கண்ணுக்குதெரியாத சின்ன எழுத்துக்களிலும் குறிப்பிட்டு விளம்பரம் செய்தனர். அதனால் படத்தின் பெயர் அரசு என்றே ரசிகர்கள் மனதில் பதிவானது. இப்படியொரு சூது நடக்கும் என்று அறியாத, அரசு பெயரை பதிவு செய்திருந்த நிறுவனம், கடைசிவரை அப்பெயரை பயன்படுத்த முடியாமலே போனது.