1963 லேயே அடிமைப் பெண் படத்தை எடுப்பதற்காக எம்ஜிஆர் முய்ற்சி மேற்கொண்டார். படத்தை அவரே இயக்குவது எனவும் முடிவானது. பல காரணங்களால் அந்த முயற்சி தள்ளிப்போய் 1967 இல் படம் ஆரம்பமானது. அதில் எம்ஜிஆருடன் சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா மூவரும் நடிப்பது என முடிவானது. பி.என்.சுந்தரம் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமானார். படம் ஆரம்பிக்கப்பட்ட பின் கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு அடிமைப் பெண் குறித்து எந்த செய்தியும் வரவில்லை.
எம்ஜிஆர் படங்களை தொடங்குவதும் பிறகு அவற்றை கிடப்பில் போடுவதும் புதிதல்ல. 1936 இல் சதிலீலாவதி படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த எம்ஜிஆர் 1981 வரை 138 திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் தொடங்கி கைவிடப்பட்ட படங்களின் எண்ணிக்கை மட்டும் ஐம்பதுக்கும் மேல் இருக்கும். சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா ஆகியோரை வைத்து அவர் தொடங்கிய அடிமைப் பெண்ணும் அதில் ஒன்று.
படம் கைவிடப்பட்ட ஓராண்டு கழிந்த பின், மீண்டும் அடிமைப் பெண் படவேலைகளை எம்ஜிஆர் தொடங்கினார். இந்தமுறை ஆர்.எம்.வீரப்பன், லக்ஷ்மணன், என்கேடி சாமி உள்ளிட்டவர்கள் கதையில் நிறைய மாற்றங்கள் செய்தனர். எம்ஜிஆருக்கு அதே இரட்டை வேடம். மூன்று நாயகிகள் என்பதிலும் மாற்றமில்லை. ஆனால், சரோஜாதேவி, கே.ஆர்.விஜயாவுக்கு பதில் ஜெயலலிதா இரண்டு வேடங்களில் நடித்தார். மூன்றhவது நாயகியாக ராஜஸ்ரீ ஒப்பந்தம் செய்யப்பட்டார். எம்ஜிஆருக்கு ராசியாக அமைந்த இயக்குனர் கே.சங்கர் படத்தை இயக்குவது எனவும் முடிவானது.
கே.சங்கர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் படம் இயக்கியவர். சிவாஜியை வைத்து ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, மிருதங்க சக்ரவர்த்தி போன்ற சிறந்த படங்களை தந்தவர். அவர் அடிமைப் பெண்ணை இயக்குவதற்கு முன்னால் எம்ஜிஆர் நடிப்பில் பணத்தோட்டம், கலங்கரை விளக்கம், சந்திரோதயம், குடியிருந்தகோயில் படங்களை இயக்கியிருந்தார்.
எம்ஜிஆரை வைத்து மட்டும் இவர் எட்டு திரைப்படங்கள் இயக்கியுள்ளார். ஒருகட்டத்துக்குப் பின் வருவான் வடிவேலன், தாய் மூகாம்பிகை, நம்பினோர் கெடுவதில்லை என பத்துக்கும் மேற்பட்ட பக்திப் படங்களை இயக்கினார். அறுபதுகளில் எம்ஜிஆரின் மனம் கவர்ந்த இயக்குனராக இருந்ததால் அமைப் பெண்ணை இயக்கும் பொறுப்பு கே.சங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா நடிப்பில் தொடங்கப்பட்ட அடிமைப் பெண் ஏன் கிடப்பில் போடப்பட்டது, அவர்களுக்குப் பதில் இரட்டை வேடம் ஜெயலலிதாவுக்கு எப்படி கிடைத்தது என்பதெல்லாம் இன்றும் விடைதெரியாத கேள்விகள். இத்தனைக்கும் எம்ஜிஆர் சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா இடம்பெறும் அடிமைப் பெண் படப்பிடிப்பு புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன. அதன் பிறகே படம் கைவிடப்பட்டது. அடிமைப் பெண்ணில் சரோஜாதேவி, கே.ஆர்விஜயா நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? யாருக்கு எந்த கதாபாத்திரம் கிடைத்திருக்கும்? கற்பனையே சுவாரஸியமாகத்தான் இருக்கிறது.