1985 இல் நான் அடிமை இல்லை என்று ஒரு படத்தை ரஜினி நடிப்பில் தொடங்கினர். துவாரகிஷ் படத்தை தயாரித்து, இயக்கினார். நான் மகான் அல்ல படத்தைப் போல, நான் அடிமை இல்லை படத்தையும் இந்திப் படத்தின் தழுவலாக எடுத்தனர். இந்தமுறை மிதுன் சக்ரவர்த்தி, பத்மினி கொல்காபூர் நடித்த பியார் ஜுக்தா நகின் என்ற படத்தைத் தழுவினர். 1986 மார்ச் 1 படம் வெளியானது.
நான் அடிமை இல்லை படத்தில் ரஜினி போட்டோகிராஃபராக நடித்தார். அவரது பணக்கார காதலியாக ஸ்ரீதேவி. அவர்தான் நடிக்க வேண்டும் என்று ரஜினி சொல்ல, அப்படியே ஸ்ரீதேவியை ஒப்பந்தம் செய்தனர். படத்தில் அவரது பணக்கார தந்தையாக கன்னட நடிகர் க்ரிஷ் கர்னட் நடித்தார். மகளின் காதலுக்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்க, அவரை எதிர்த்து ரஜினியும், ஸ்ரீதேவியும் திருமணம் செய்து கொள்வார்கள். திருமணத்துக்குப் பிறகு கணவன், மனைவி இடையே எழும் பிரச்சனையை பெரிதாக்கி க்ரிஷ் கர்னட் இருவரையும் பிரிப்பார். விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் போது, ஸ்ரீதேவி கர்ப்பமாக இருப்பது தெரியும். ஸ்ரீதேவி ரஜினியை தேடிப் போவார். அதற்குள் ரஜினி வீட்டை காலி செய்து போயிருப்பார்.
ஸ்ரீதேவிக்கு குழந்தைப் பிறக்கும் அதே மருத்துவமனைக்கு வரும் ரஜினி, தனக்கு குழந்தை பிறந்திருப்பதை அறிந்து கொள்வார். க்ரிஷ் கர்னட் குழந்தையை ஆனாதை இல்ல தொட்டிலில் போட்டு, ஸ்ரீதேவியிடம் குழந்தை இறந்துவிட்டதாகச் சொல்வார். ஆனாதை இல்ல தொட்டிலில் போடப்பட்ட குழந்தையை ரஜினி எடுத்து வளர்ப்பார். தனது குழந்தை இறந்துவிட்டதை நம்ப மறுக்கும் ஸ்ரீதேவியின் மனநிலை தவறிவிடும். வருடங்கள் கழிந்த பிறகு பக்கத்து வீட்டுச் சிறுவன் ஸ்ரீதேவியை ஆபாத்திலிருந்து காப்பாற்றுவான்.. பிறகுதான் அது அவரது மகன் என்பது தெரிய வரும்.
அடிதடி ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த ரஜினிக்கு ஒத்துவராத கதை நான் அடிமை இல்லை. பாக்ஸ் ஆபிஸில் படம் தோல்வி கண்டது. இந்தப் படத்தை தமிழ், கன்னடம் இரு மொழிகளில் எடுத்தனர். அப்போது ஸ்ரீதேவி பிஸியாக நடித்தக் கொண்டிருந்தார். இந்தியில் வாய்ப்புகள் குவிந்தவண்ணம் இருந்தன. இதில் வேடிக்கை என்னவென்றால், மிதுன் சக்ரவர்த்தியின் அதே இந்திப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஸ்ரீதேவி, கிருஷ்ணாவுடன் நடித்தார். டி.ராமராவ் இயக்கிய அந்தப் படம் 1985 திரைக்கு வந்து வெற்றி பெற்றது. அதைப் பார்த்துதான் ஸ்ரீதேவிதான் வேண்டும் என்றார் ரஜினி. இந்தி, தெலுங்கில் வெற்றி பெற்ற படம் தமிழில் தோல்வியடைந்தது துரதிர்ஷ்டமே.
இந்தி வாய்ப்புகள் அதிகளவில் வந்த நிலையில், நான் அடிமை இல்லை தோல்வியடைய, தமிழ் சினிமாவில் நடித்தது போதும் என்று மும்பையில் செட்டிலானார் ஸ்ரீதேவி. ரஜினியுடன் நடித்த கடைசிப் படம் மட்டுமில்லை, தமிழில் அவர் நடித்த கடைசிப் படமும் நான் அடிமை இல்லைதான். அதன் பிறகு இந்தியில் ரிட்டையர்ட் ஆன பிறகே தமிழுக்கு வந்தார் என்பது முக்கியமானது. விஜய் ஆனந்த் இசையில் ஒரு ஜீவன்தான் பாடலைத் தவிர நான் அடிமை இல்லையில் குறிப்பிடும்படி ஏதும் இல்லை.