நல்ல நடிகை என்று பெயர் வாங்க விரும்புகிறவர்கள் அதிகமாக தேர்வு செய்வது பாலியல் தொழிலாளி கதாபாத்திரம். சமீபத்தில் அலியா பட் கங்குபாய் கத்யவாடி படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து பாராட்டுக்களை அள்ளினார். ஆனால், தொண்ணூறுகளுக்கு முன் பாலியல் தொழிலாளியாக நடிப்பதை துணிச்சலாகவோ, திறமையாகவோ பார்க்காமல் அவர்களை ஒதுக்குகிற போக்கு இருந்தது. அதற்கு பலியான பல நடிகைகளில் பிரமிளா முக்கியமானவர்.
பிரமிளா திருச்சிராப்பள்ளியில் பிறந்தவர். திரைப்படத்தில் நடிப்பதற்கு வசதியாக அவரது குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்தது. ஆரம்பக்கல்வியை பிரமிளா சென்னையில்தான் முடித்தார். 1968 இல், தனது 12 வது வயதில் மலையாளத்தில் வெளியான இன்ஸ்பெக்டர் திரைப்படத்தில் நடித்தார். 1972 இல் வெளியான வாழையடி வாழை திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து தேவரின் கோமாதா என் குலமாதா, பாலசந்தரின் அரங்கேற்றம் படங்களில் ஒப்பந்தமானார். இவற்றில் பாலசந்தரின் படத்தை அதிகம் எதிர்பார்த்தார் பிரமிளா. அரங்கேற்றம் நாயகி மையப் படம் என்பதும், நாயகியாக பிரமிளா நடித்ததும் கூடுதல் காரணம். இதன் காரணமாக கோமாதா என் குலமாதா படத்துக்கு ஒதுக்கிய கால்ஷீட்டை அரங்கேற்றத்துக்கு தந்து, தேவரின் கோபத்துக்கு ஆளானார்.
1973, பிப்ரவரி 9 ஆம் தேதி அரங்கேற்றம் திரைக்கு வந்தது. எட்டு குழந்தைகள் உள்ள ஏழை பிராமண வீட்டின் மூத்தப் பெண்ணாக இதில் பிரமிளா நடித்தார். பட்டினி கிடக்கும் அளவுக்கு குடும்பத்தில் வறுமை. குடும்பத் தலைவரின் வறட்டு கௌரவம் காரணமாக வேலைக்குச் செல்லும் பிரமிளாவின் ஆசை தொடர்ந்து நிராகரிக்கப்படும். ஒருநாள் அவரது தம்பிகளில் ஒருவன் பிச்சைக்காரர்களிடம் உணவு சாப்பிடுவதைக் கண்டு, வேலைக்குச் செல்ல தீர்மானிப்பார். அழகான பிரமிளாவை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்வார். தம்பியின் மருத்துவக் கல்லூரி கட்டணத்துக்காக முதலாளியுடம் சோரம் போவார். இறுதியில் விபச்சாரமே வாழ்க்கையாகும்.
பிரமிளாவின் தியாகத்தால் அவரது குடும்பம் வசதி வாய்ப்புகளை பெறும். ஒருகட்டத்தில், பிரமிளாவின் தொழில் குடும்பத்தினருக்கு தெரிய வரும். அனைவரும் அவரை வெறுத்து ஒதுக்குவார்கள். பக்கத்துவீட்டு சிவகுமாரும், அவரது தந்தையுமே அவளுக்கு ஆறுதலாக இருப்பார்கள். சிவகுமார் பிரமிளாவை திருமணம் செய்து கொள்வார். எனினும் வாழ்வில் நடந்த கசப்புகள் பிரமிளாவின் மனதை பிரளச் செய்து அதுவே அவரது வாழ்வின் இறுதி அத்தியாயமாக முடியும். பிரமிளா அரங்கேற்றத்தில் தனது உச்சபட்ச நடிப்பை தந்தார். அவரது தம்பியாக கமலஹாசன் நடித்தார். முறுக்கிய மீசை சிவகுமாரின் அமுல் முகத்துக்கு ஒட்டவில்லை. அவரது கதாபாத்திரமும். ஜெயசித்ரா, ஜெயசுதா இருவரின் முதல் தமிழ்ப் படமாக அரங்கேற்றம் அமைந்தது. லட்சுமி சின்ன வேடம் ஒன்றில் நடித்தார்.
அரங்கேற்றம் வெளியானதற்கு அடுத்த வருடம் நடித்த பருவ காலம் படத்தில் பிரமிளாவுக்கு பாலியல் தொழிலாளி வேடமே கிடைத்தது. நாயகியாக வலம் வர வேண்டியவர் துண்டு துக்கடா வேடங்களில் ஒதுங்க வேண்டிய நிலையில், மலையாளத்தில் கவனம் செலுத்தினார். தம்புராட்டிப் போன்ற மென் பாலியல் கதை படங்களில் தோன்றினார். பிரமிளா என்றால் காலைக் காட்சி நடிகை என்ற முத்திரையுடன் காணாமல் போனார்.
பிராமண பாலியல் தொழிலாளியாக நடித்ததற்காக ஒரு நடிகை ஓரங்கட்டப்பட்டார் என்பது இன்று ஆச்சரியமாக இருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் அப்படியும் நடந்திருக்கிறது. ஆண்களால் வஞ்சிக்கப்படுகிற அரங்கேற்றம் நாயகியைப் போன்ற பெண்கள் இறுதியில் பரிதாபமாக இறப்பது போலவோ, மனநிலை சரியில்லாமல் அலைவது போலவோ, சொந்தங்கள் அகன்று தனிமையில் வாடுவதாகவோதான் பீம்சிங் தொடங்கி பாலசந்தர்வரை கதை செய்திருக்கிறார்கள். இவர்கள் படங்களில் தவறிழைத்த ஆண்கள் தண்டிக்கப்படுவதில்லை, பலியாடு பெண்கள் மட்டுமே. ஏன் இப்படி என்பதும் ஆராயப்பட வேண்டிய ஒன்று. 1973, பிப்ரவரி 9 வெளியான அரங்கேற்றம் நேற்று முன்தினம் ஐம்பது வருடங்களை நிறைவு செய்தது.