பெண் வேடத்தில் ஆண்கள் நடிப்பது முன்பு சாதாரணமாக இருந்து வந்தது. நடிப்பதற்கு பெண் நடிகைகள் அதிகம் கிடைக்காமல் போனது முக்கிய காரணம். ஆனால், பெண்கள் ஆண் வேடத்தில் நடிப்பது அரிதினும் அரிதானது. எம்.எஸ்.சுப்புலட்சுமி நாரதராக வேடம் போட்டுள்ளார். 1941 வெளியான சாவித்ரி படத்தில் அவர் ஆண் வேடமிட்டு நடித்தார்.
திரைப்படங்களில் ஆத்திக, நாத்திக தர்க்கம் ஆரம்பம் முதலே இருந்து வருகிறது. நாத்திகம், ஆத்திகம் குறித்து திரைநட்சத்திரங்கள் சினிமாவுக்கு வெளியே பேசுவதும் வைரலாகும். சமீபத்தில் ரஜினி பேசுகையில், விஞ்ஞானத்தால் ஒரு சொட்டு ரத்தத்தை உருவாக்க முடியாது, அப்படி இருந்தும் சிலர் கடவுள் இல்லை என்று சொல்வதைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா தெரியவில்லை என்றார்.
1953 இல் வெளியான மதன மோகினியில் வரும் மன்னர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர், நாத்திகர். அவருக்கு ஒரு மகன் மற்றும் மதனா, மோகினி என இரு மருமகள்கள். மதனா கடவுள் நம்பிக்கை, பிரார்த்தனை என இருப்பவள். இதனால் கோபமாகும் மன்னர் அவளை நாடு கடத்திவிடுவார். மதனா ஆண் வேடமிட்டு, இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்கு அளிக்கும் கூட்டம் ஒன்றுடன் இணைந்து கொள்வார். ஒருமுறை, ஆண் வேடமிட்டிருக்கும் அவளிடம், அரண்மனை ஊழியன் என அறிமுகப்படுத்திக் கொள்பவன், அரண்மனைக்குள் இருக்கும் விலைமதிக்க முடியாத மூன்று கற்களை குறித்துச் சொல்வான்.
இருவருமாகச் சேர்ந்து அதில் ஒரு கல்லை கொள்ளையடிக்கும் போது அரண்மனை வீரர்கள் அவர்களை கைது செய்வார்கள். அரசர் முன்னிலையில் அவர்கள் நிறுத்தப்படும் போதுதான் அந்த அரண்மனை ஊழியன் அரசரின் மகன் என்பதும், அரசவையில் உள்ள சில புல்லுருவிகளை அடையாளம் காண அவன் அந்த வேடம் போட்டதும் தெரியவரும். ஆண் வேடத்தில் இருப்பது மதனா என்பதை கண்டு கொள்ளும் இளவரசன் அவள் மீது காதல் கொள்வான். ஆனால், அரசர் தனது மகனுக்கு மதனாவின் சகோதரி மோகினியை மணமுடிக்க நினைப்பார்.
மோகினியும் கடவுள் நம்பிக்கை, பிரார்த்தனை என திசைமாற, மன்னர் அவளது கடவுள் சம்பந்தப்பட்ட அனைத்து பொருள்களையும் நாசமாக்குவார். மதனாவைப் போலவே மோகினியும் இளவரசனை விரும்புவாள். இறுதியில் மதனா, மோகினி இருவரின் அண்ணன் ஒரு யோசனை சொல்வார். அக்கா, தங்கை இருவரையும் இளவரசன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் வைக்க மதனா, மோகினி, இளவரசன் மூவரும் அதனை ஏற்றுக் கொள்வார்கள்.
இதில் இளவரசனாக நரசிம்ம பாரதியும், மதனாவாக சி.ஆர்.ராஜகுமாரியும், மோகினியாக பொள்ளாச்சி கமலாவும் நடித்தனர். கே.வி.மகாதேவன் படத்துக்கு இசையமைத்தார். படத்தில் குத்துச்சண்டை என்று ஜி.வர்மா, எம்.கான்சாகிப், எம்.சி.தாமஸ் அகியோருடன் ஆரிய வீரன் சீனன் என்ற பெயரும் இடம்பெற்றிருக்கும். இந்த ஆரிய வீரன் சீனன், அன்றைய புகழ்பெற்ற சண்டைக் கலைஞர் ஸ்ரீனிவாசுலு நாயுடு ஆவார். அவரது பட்டப் பெயர்தான் ஆரிய வீரன் சீனன். நாற்பதுகளில் மஞ்சள் பத்திரிரிகையாளர் லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர், கலைவாணருடன் இவரும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதன மோகினி வெளியான போது எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதன் பிரதிகள் அழிந்து போகாததால் இன்றுவரை பல லட்சம் பேர் இந்தப் படத்தை கண்டுகளித்துள்ளனர். எம்.எல்.பதி இயக்கிய மதன மோகினி இப்போதும் ரசிகர்கள் விரும்பும் படங்களுள் ஒன்றாக உள்ளது. 1953 மார்ச் 14 வெளியான இப்படம் இன்று 70 வது வருடத்தை நிறைவு செய்கிறது.