வீரபாண்டிய கட்டபொம்மன் 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்டு மரணமடைந்த வீரர். அவரது வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்க பல முயற்சிகள் நடந்தன. செல்வம் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாறை கட்டபொம்மு என்ற பெயரில் (இதுதான் கட்டபொம்மனின் ஒரிஜினல் பெயர்) எடுப்பதாக 1948 ஜுலையில் அறிவித்தது. அப்போது முன்னணி நட்சத்திரமாக இருந்த பி.யூ.சின்னப்பா கட்டபொம்மனாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், அப்படம் கைவிடப்பட்டது.
இதன் பிறகு 1953 இல் ஜெமினி ஸ்டுடியோஸ் எஸ்.எஸ்.வாசன் கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறை கட்டபொம்மன் என்ற பெயரில் எடுக்கவிருப்பதாக அறிவித்தார். அதற்கான கதை, திரைக்கதை எழுத கோதமங்கலம் சுப்பு, வேப்பூர் கிட்டு ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கட்டபொம்மன் குறித்த உரிய தகவல்களுடன் வருகிறவர்களுக்கு சன்மானம் அளிக்கப்படும் என ஆனந்த விகடனில் அறிவிக்கப்பட்டது. 1953 நவம்பர் 5 கட்டபொம்மன் படம் குறித்து எஸ்.எஸ்.வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், அந்த முயற்சியும் கரைசேரவில்லை.
பிறகு சிவாஜி கணேசனும், கதாசிரியர் டி.கே.கிருஷ்ணசாமியும் ஐம்பதுகளின் மத்தியில் கயத்தாறு வழியாக பணம் செய்யும் போது, கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாறை நாடகமாக எழுதும்படி நடிகர் சிவாஜி கிருஷ்ணசாமியை கேட்டுக் கொண்டார். அந்த நேரத்தில் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த போதும், நாடகத்தின் மீதான சிவாஜியின் காதல் அப்படியே இருந்தது. அவர் கேட்டுக் கொண்டபடி நாடகத்தை கிருஷ்ணசாமி எழுதித் தந்தார்.
சிவாஜியின் சிவாஜி நாடக மன்றம் கட்டபொம்மன் நாடகத்தை அரங்கேற்றியது. சிவாஜி, எம்.ஆர்.சந்தானம் உள்ளிட்டோர் நாடகத்தில் நடித்தனர். 100 முறைகளுக்கு மேல் அரங்கேற்றப்பட்ட இந்த நாடகத்தின் அரங்குக்காக மட்டும் சிவாஜி 5,000/- ரூபாய் செலவளித்தார். நாடக அரங்கேற்றத்துக்கான செலவு, நடிகர்கள், பிற கலைஞர்களுக்கான சம்பளம் அனைத்தும் போக 32 லட்ச ரூபாய் லாபத்தை நாடகம் சம்பாதித்துத் தந்தது. இதில் கணிசமான பகுதியை தமிழக பள்ளிகளுக்கு பென்ச், சேர் போன்ற உபகரணங்கள் வாங்க சிவாஜி நன்கொடையாக அளித்தார்.
நாடகத்தைப் பார்த்த பி.ஆர்.பந்துலு அதனை தனது பத்மினி பிக்சர்ஸ் சார்பில் படமாக்க விரும்பினார். எஸ்.எஸ்.வாசனும் கட்டபொம்மன் கதையை படமாக்க முயன்றது தெரியவர, அவரிடம் விஷயத்தை கூறினர். இதனையடுத்து எஸ்.எஸ்.வாசன் தன்னிடம் இருந்த கட்டபொம்மன் குறித்தத் தகவல்களை அவர் தந்துதவியதாக கூறப்படுகிறது. இதில் இன்னொரு செய்தியும் உண்டு. வாசனின் சந்திரலேகா திரைப்படத்தில் சிவாஜிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், கட்டபொம்மன் படத்துக்கு வாசன் அவரை அணுகிய போது, பழிக்குப்பழியாக சிவாஜி மறுத்துவிட்டதாக ஒருசாரர் கூறுகின்றனர்.
1957 இல் வீரபாண்டிய கட்டபொம்மன் படவேலைகள் ஆரம்பமாகின. படம் முடிந்து 1958 மே 10 லண்டனில் படத்தின் ப்ரீமியர் ஷோ நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 6 தினங்கள் கழித்து, மே 16 ஆம் தேதி படம் தமிழ்நாட்டில் திரைக்கு வந்தது. வீரபாண்டிய கட்டபொம்மன் திரையரங்குகளில் சூறாவளியை கிளப்பியது. திரையிட்ட அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து படத்தை கண்டு ரசித்தனர். தமிழ்நாடு மட்டடுமின்றி பிற மாநிலங்களிலும் படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
மதுரை நியூ சினிமா உள்பட பல திரையரங்குகளில் படம் 175 நாள்களை கடந்து வெள்ளிவிழா கொண்டாடியது. டெக்னி கலரில் எடுக்கப்பட்ட முதல் முழுநீள தமிழ் திரைப்படம் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகும். அதே போல் சர்வதேச விருது பெற்ற முதல் தமிழ்ப் படமும் இதுவே. 1960 இல் கெய்ரோவில் நடந்த நடந்த ஆப்ரோ - ஏஷியன் விருது விழாவில் சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த படம் என மூன்று விருதுகளை வென்றது. விருது வென்று திரும்பிய கலைஞர்களுக்கு பிரமாண்ட வரவேற்பும், பாராட்டு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
1984 இல் வீரபாண்டிய கட்டபொம்மன் மறுவவெளியீடு கண்டபோது மக்கள் திரண்டு சென்று பார்த்தனர். பிறகு டிஜிட்டலில் மேம்படுத்தி 2015 ஆகஸ்ட் 21 மீண்டும் வெளியிட்டனர். அப்போது வெளியான புதிய தமிழ்ப் படங்களைவிட வீரபாண்டிய கட்டபொம்மன் அதிகம் வசூலித்து, அனைவருக்கும் பெருத்த லாபத்தை தந்தது. இன்று வெளியிட்டாலும் மக்களை திரட்டக் கூடிய சக்தி அப்படத்திற்கு உண்டு. 1958 மே 16 வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன் நேற்று - மே 16 - 65 வது வருடத்தை நிறைவு செய்து இன்று 66 வது வருடத்தில் நுழைகிறது.