அமலா அறிமுகமானது தமிழில். அவர் தமிழில் நடிப்பதை நிறுத்தி கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு கணம் என்ற தமிழ்ப்படத்தில் நடித்தார். கணம் ரிலீஸின்போது பேட்டியளித்த அமலா, "மேக்கப் போட்டு சும்மா வந்து நிற்கிற கேரக்டர் ரொம்பவே போர், எனக்குப் பிடிக்காது. ஆனால், கமலின் புஷ்பக் (தமிழில் பேசும் படம்) அப்படியில்லை, நடிக்க நிறைய வேலையிருந்தது. கமலிடமிருந்து நிறைய கத்துக்கிட்டேன். என்னுடைய சினிமா கரியரை புஷ்பக்குக்கு முன்னால் புஷ்பக்குக்கு பின்னால் என்று பிரிக்கலாம். புஷ்பக்கில் நடித்த பிறகே நல்ல வேடங்களில் நடிக்க ஆரம்பித்தேன்" என்றார்.
சமீபத்தில் வெளியாகி விக்ரம் ஹிட்டானதைத் தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கமல் ரசிகர்கள் ரஜினி ரசிகர்களுடன் இணையத்தில் போரில் இறங்கினர். அவரா இவரா எவர் பெரியவர், யார் கலெக்ஷன் கிங் என்பதுதான் போட்டி. அமலாவின் பேட்டி வெளியானதும், வேலைக்காரன், கொடி பறக்குது மாப்பிள்ளை என்று ரஜினியுடன் பல படங்கள் அமலா நடித்திருந்தாலும், கமலுடன் நடித்த புஷ்பக் படத்தைதான் சொல்லியிருக்கார். எங்காளுதான் கெத்து என்று தங்களின் ஈகோ போரில் அமலாவையும் இழுத்து, கமல் ரசிகர்கள் இணையத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறார்கள். நம்ம பேச்சு கமல் - ரஜினி மோதலில் பாஸ்பரஸ் வீசியிருப்பது பாவம் அமலாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சத்யா படத்தில் கீதா நாயராக வரும் அமலா அவ்வளவு க்யூட். அவரை மலையாளி என்றே ரசிகர்கள் நினைத்தனர். சத்யாவில் அவருக்கு அடைக்கலம் தந்திருப்பவராக மலையாளத்தின் மூத்த நடிகை கவியூர் பொன்னம்மா நடித்திருந்தார். ரசிகர்கள் அமலா மலையாளிதான் என்று உறுதியாக நம்பினர். அவர் நாகார்ஜுனாவை திருமணம் செய்த போது, ஒருவேளை தெலுங்கோ என்று ஐயப்பட்டனர். ஆனால், அவர் மலையாளியோ, தெலுங்கோ, தமிழோ அல்ல. வங்காளி அப்பாவுக்கும், ஐரிஷ் அம்மாவுக்கும் பிறந்தவர். அப்பா கடற்படை அதிகாரி. கொல்கத்தாவில் பிறந்த அமலா சென்னையில் உள்ள கலாஷேத்ராவில் பைன் ஆர்ட்ஸ் படித்தார்.
அதற்கடுத்த வருடம் 1987 இல் ரஜினியுடன் வேலைக்காரன் படத்தில் நடித்ததன் மூலம் அமலா முன்னணி நடிகையானார். வேதம் புதிது, இது ஒரு தொடர்கதை,, கூட்டுப் புழுக்கள், பேசும் படம் ஆகியவை அந்த வருடம் வெளியான படங்களில் சில. இதில் கூட்டுப் புழுக்கள் படத்தில் ரகுவரன் ஜோடியாக நடித்திருந்தார். கூட்டுக் குடித்தனங்கள் மிகுந்த ஒரு குடியிருப்பை மையப்படுத்தி ஆர்.சி.சக்தி கூட்டுப் புழுக்கள் படத்தை எடுத்திருந்தார். குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள், பாலியல் வேட்கை, வறுமை, சாதி, வர்க்கமுரண் என்று அனைத்தையும் பேசிய படம் அன்று விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.
இந்தப் படத்தில் நடித்த போது ரகுவரன் அமலாவை காதலிக்க ஆரம்பித்தார். ஒருதலைக் காதல்தான். தனது காதலை அவர் அமலாவிடம் கூறிய போது அமலா அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. காதல் தோல்வி ரகுவரை மனஅழுத்தத்தில் தள்ளியது. இதனை அவரே பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். கொடி பறக்குது, வெற்றி விழா, மாப்பிள்ளை என முக்கியமான படங்களில் நடித்தவர் 1991 இல் கற்பூர முல்லைக்குப் பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டார். அதற்கு முன் 1989 இல் சிவா தெலுங்குப் படத்தில் நடிக்கைகையில் நாகார்ஜுனுடன் அமலாவுக்கு நட்பு ஏற்பட்டது. இந்தப் படத்தில் நாகார்ஜுனா, அமலா ஜோடியாகவும், ரகுவரன் வில்லனாகவும் நடித்திருந்தனர்.
1991 இல் நிர்மயம் படத்தில் நடிக்கையில் நட்பு தீவிர காதலானது. 1993 இல் நாகார்ஜுனாவை திருமணம் செய்து அமலா அக்னியேனி ஆனப்பிறகு அவர் நடிப்பதை நிறுத்தினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2012 இல் லைஃப் இஸ் பியூட்டிஃபுல் தெலுங்குப் படத்தில் நடித்தார். தொடர்ந்து ஒன்றிரண்டு இந்திப் படங்கள், மலையாளப் படங்களில் தலைக்காட்டினார். 2022 இல் நடித்த ஒக்க ஒக்க ஜீவிதம் (தமிழில் கணம்) படம் வெளியாகியுள்ளது.