தமிழகத்தில் உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி தேர்வர்கள் விறுவிறு என்று தகுதித் தேர்வுக்காகத் தாயாராகி கொண்டியிருக்கிறார்கள். வரும் டிசம்பர் 4 ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இப்பணிக்கான தேர்வு நடைபெறவுள்ளது. இப்பணிக்கான தேர்வுக்கு எளிமையாகத் தயார் ஆவது எப்படி மற்றும் கிராம உதவியாளராக ஒருவருக்கு இருக்கும் பணிகள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
இந்த தேர்வு, வாசித்தல், எழுதுதல் என இரண்டு நிலையில் இருக்கும். எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். இதற்கு 10 மதிப்பெண் வழங்கப்படும். ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத வைக்கலாம். இதற்கு 30 மதிப்பெண் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டமும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரின் கீழ் இயங்கி வருகிறது. நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு மாவட்டமும் வருவாய் கோட்ட நிர்வாகம் (Sub Divisional Level), வருவாய் வட்ட நிர்வாகம் (Taluk Level), குறுவட்ட நிர்வாகம் (Firka), வருவாய் கிராம நிர்வாகம் (Revenue Village) என பிரிக்கப்பட்டுளளது. மாநிலத்தின் இருக்கும் 94 வருவாய் கோட்டங்கள் சார் வட்டாச்சியர் தலைமையிலும், 313 வருவாய் வட்டங்கள் தாசில்தார் தலைமையிலும், 1195 குறுவட்டங்கள் வருவாய் அலுவலர் தலைமையிலும், 16,000க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் கிராம நிர்வாக அலுவலர் (VAO) தலைமையிலும் இயங்கி வருகிறது.
வருவாய் நிர்வாகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இந்த, கிராம நிர்வாக அலுவலர்களின் கீழ் கிராம உதவியாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். 1995க்கு முன்பு வரை, கிராம உதவியாளர்கள் தற்காலிக, தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்று வந்தனர். 1995ம் ஆண்டு வெளியிட்ட அரசாணை எண்.625 கீழ் இவர்கள் முழு நேரப் பணியாளராக மாற்றப்பட்டனர். ஊதிய உயர்வு, ஓய்வூதியம், கருணை அடிப்படையிலான வேலை உள்ளிட்டவைகளும் சிறப்பு ஊதிய விதியின் கீழ் வழங்கப்படுகிறது.
கிராம நிர்வாகப் பணிகள்: கிராமக் கணக்குகளைப் பராமரிப்பது, சாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்புச் சான்று ஆகியவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புவது, இயற்கை பேரிடரின்போது மேல் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்புவது, கொலை, தற்கொலை, அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுப்பது, முதியோர் ஒய்வூதியம் வழங்குவது குறித்தான பணிகளைக் கவனிப்பது, பொதுச் சொத்துகள் பற்றிய பதிவேட்டைப் பராமரிப்பது ,வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற சேவை நிறுவனங்களுக்குத் தேவையான விவரங்களை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் கிராம நிர்வாகத்தின் கீழ் வருகிறது வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்ள விஏஓ-விற்கு கிராம உதவியாளர்கள் உதவ வேண்டும்.
எனவே, கிராம உதவியாளர் பதவியின் கடமைகளை முதலில் தெரிந்து கொண்டு, இதுதொடர்பான புத்தகம், கட்டுரைகளை படிக்கத் தொடங்குகள். உங்கள் அருகில் உள்ள கிராம நூலகத்தை பயன்படுத்தத் தொடங்குங்கள். கல்வி சான்றிதழ் , சாதி சான்றிதழ் , இருப்பிடச் சான்றிதழ் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் உள்ளிட்டவைகள் தயார் நிலையில் வைத்திருங்கள்.