கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் வகையில் 2005ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் கீழ், 100 நாள் வேலை திட்டத்தை அந்தந்த மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இந்த சட்டம், ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு வேலை உறுதி அளிக்கிறது. 100 நாட்கள் வேலை தர அரசு (பஞ்சாயத்து அமைப்புகள்) தவறினால் , பாதிக்கப்பட்டவருக்கு முதல் 30 நாட்களுக்கு சம்பளத்தில் கால் பங்கும், மேலும் தவறினால் பாதி ஊதியத்தை அபராதமாக அரசு தர வேண்டும்.
இந்நிலையில், 2023 ஜனவரி 30ம் தேதியன்று, மத்திய ஊரக மேம்பாடு அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும்/யூனியன் பிரதேசங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், 2023, பிப்ரவரி 1ம் தேதி முதல், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஊதியம் பெற, ஆதார் எண்ணை கொண்டு பணம் செலுத்தும் முறைகள் (ABPS -Aadhar Based Payment System) கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், ABPS செய்யாதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாக அறிவித்தது.
ABPS என்றால் என்ன? ABPS என்பது ஒரு வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்கும் செயல்முறையாகும். இதன் கீழ், ஒரு நபரின் 100 நாள் வேலை அட்டை, வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் எண் தொடர்புபடுத்தப்படும். இதற்கு, சம்பந்தப்பட்ட நபர், தனது வங்கிக்கு சென்று NPCI Mapping என்ற விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம், அந்த நபர் ஏற்கனவே பல வங்கி கணக்குகளை வைத்திருந்தாலும், எதிர்காலத்தில் கணக்குள் தொடங்கினாலும், 100 நாள் ஊதியம் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு நேரடியாக சென்றுவிடும்.
இதிலுள்ள பிரச்சனைகள் என்ன? 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், பெரும்பாலும் சமூக அடித்தட்டில் இருக்கும் மக்களும், கையறு நிலை மக்களே அதிகளவு பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக, கணவன் அற்ற நிலையில் உள்ள பெண்கள், தனித்து விடப்பட்ட பெண்கள் இதில் அதிகம் உழைத்து ஊதியம் பெற்று வருகின்றனர். Aadhar Seeding, NPCI Mapping போன்ற செயற்பாடுகள் குறித்த விழிப்புணர்வு அவர்களிடம் இல்லை. மேலும், KYC (உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்) நெறிமுறைகள் கடினமானதாக கருதுகின்றனர்.
உதாரணமாக, மார்ச் 17ம் தேதி நிலவரப்படி, 100 நாள் வேலைப் பணியாளர்களில் இதுநாள் வரையில், 47% பேர் ABPS-ன் கீழ் வரவில்லை. உத்தரபிரதேசம், பிகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 1 கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் ABPS முறையின் கீழ் வரவில்லை. தமிழ்நாட்டில், 42 லட்சத்துக்கும் அதிகமானோர் (42,88,339) ஆதார் எண்ணை கொண்டு பணம் வழங்கும் திட்டட்தின் (ABPS) கீழ் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை.