மரபு சந்தையிலேயே இறைச்சி வகையான நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி, மீன், முட்டை, காடை முட்டை பணியாரம், நெய் கிச்சடி அரிசி பணியாரம் என உண்டு மகிழ்ந்தனர். ஒன்பது வகையான பாரம்பரியம் மிக்க நவதானிய மூலிகை பருப்பு தோசை, கருப்புகவுனி, மாப்பிள்ளை சம்பா கருங்குடுவை உள்ளிட்ட உயர்ரக அரிசி தோசை,பீட்ருட் கேரட் தோசை, முடக்கத்தான் வெண்பூசணி கோவையிலை கலந்த மூலிகை தோசைகள், காடை முட்டை உணவுகளை காலை 8 மணி முதலே குடும்பத்தோடு வந்து ருசித்தனர்.
ரசாயன பொருட்கள் கலக்காத உணவுகளை பொதுமக்கள் தேடுவதால் இந்த மரபுச் சந்தைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இன்றைய மரபு சந்தையில் பொதுமக்களின் வருகை சற்று அதிகரித்திருந்தது. இன்றைய காலகட்டத்தில் ரசாயன பொருட்கள் இல்லாத உணவு கிடைப்பது என்பது எட்டாக்கனியாக இருந்து வரும் நிலையில் தர்மபுரி பாரதிபுரத்தில் உள்ள மரபுச் சந்தையில் பொதுமக்களுக்கு ஆரோக்கிய உணவை வழங்கி வருவது பொதுமக்களிடத்தில் பெரும் வரவேற்பை அளித்துள்ளது.