முதலமைச்சர் பேசும்போது, “கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கத்தான் ‘மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு அங்கீகரித்தால், ஆண்களை உள்ளடக்கிய இந்தச் சமூகமும் பெண்களுக்கான சமஉரிமையை வழங்கிடும் நிலை விரைவில் உருவாகிவிடும் என்று நமது அரசு உறுதியாக நம்புகிறது. எனவேதான், இந்தத் திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று இல்லாமல் ‘மகளிர் உரிமைத் தொகை’ என்று கவனத்துடன் பெயரிடப்பட்டிருக்கிறது
சமூகத்தின் சரிபாதியான பெண்களுக்குச் சமூக விடுதலை பெற்றுத் தந்தது திராவிட இயக்கம் என்றால், பொருளாதாரச் சமத்துவத்தை வழங்குவதுதான் திராவிட மாடல் அரசு என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன். மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் வாழ்வை சிறிதேனும் மாற்றிவிடும் என நம்பும் எந்தக் குடும்பத் தலைவியையும், மனிதநேய அடிப்படையிலான பெண் உரிமை காக்கக்கூடிய எனது தலைமையிலான திமுக அரசு கைவிட்டுவிடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.