இந்தியாவில் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் இடையே தபால் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்வது பிரபலமாக உள்ளது. இந்தியாவில் உள்ள சராசரி நடுத்தரக் குடிமகனுக்கு, நிலையான மற்றும் நல்ல வட்டி விகிதங்களைக் கொண்ட நல்ல திட்டங்களில் முதலீடு செய்வது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது. அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் தபால் அலுவலகம், மக்களின் அந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொடர் வைப்புத்திட்டம் என்றால் என்ன?
தபால் அலுவலகம் பல திட்டங்களைக் கொண்டுள்ளது, மேலும் வங்கி FDகள் மற்றும் RDகளை விட சிறந்த வருமானத்தை வழங்குகிறது. வங்கிகளில் நிலையான வைப்புத்தொகை அல்லது சேமிப்புக் கணக்குகளில் முதலீடு செய்வது ஒரு வழி என்றால், அஞ்சல் அலுவலக சேமிப்பு மூலம் உங்கள் பணத்தை முதலீடு செய்வது மற்றொரு சிறந்த வழியாகும். குறிப்பாக தபால் நிலையங்களில் உள்ள தொடர் வைப்புத் (RD) திட்டம் நல்ல லாபம் தரக்கூடிய சேமிப்பு திட்டமாகும். அஞ்சலக தொடர் வைப்புத் திட்டம் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு பாதுகாப்பு மற்றும் வருவாய் இரண்டையும் கொடுக்கிறது. அதிக வட்டி கிடைப்பதோடு, இத்திட்டத்தின் மூலம் பணத்தை இழப்பதற்கான ஆபத்தும் மிகக்குறைவு. சிறிய அளவிலான தொகையை மாத, மாதம் தவறாமல் முதலீடு செய்வதன் மூலமாக அதிக வருவாய் ஈட்ட விரும்பினால், போஸ்ட் ஆபிஸ் தொடர் வைப்பு கணக்கைத் திறப்பது ஒரு சிறந்த வழி என்பதை மறக்காதீர்கள்.
RD திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
போஸ்ட் ஆபீஸில் தொடர் வைப்பு கணக்கை எந்த வயது வந்தோரும் அல்லது 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் தொடங்கலாம். இந்தியா போஸ்ட் இணையதளத்தின்படி மாதாந்திர குறைந்தபட்ச டெபாசிட் தொகையாக 100 ரூபாயைக் கூட சேமிக்கலாம். ஜூலை 2022ம் ஆண்டு முதல், அஞ்சலக தொடர் வைப்புத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 5.8 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதற்கான கூட்டு வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் கணக்கிடப்படுகிறது. மத்திய அரசு தனது சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டிலும் நிர்ணயம் செய்கிறது.
தபால் அலுவலக RD கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் அல்லது 60 மாதங்களுக்குப் பிறகு முதிர்ச்சியடைகிறது. டெபாசிட் செய்பவர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அஞ்சல் அலுவலகத்தில் RD கணக்கை மூடலாம் மற்றும் கணக்கு தொடங்கிய நாளிலிருந்து ஒரு வருடத்திற்குப் பிறகு 50 சதவீதம் வரை கடனாகப் பெறலாம். கணக்கு முதிர்ச்சியடைவதற்கு ஒரு நாளுக்கு முன்பே மூடப்பட்டால், தபால் அலுவலக சேமிப்புக் கணக்கின் அடிப்படையில் வட்டி விகிதங்கள் பயன்படுத்தப்படும். ஒரு தபால் அலுவலக RD கணக்கை முதிர்வு தேதியிலிருந்து 5 ஆண்டுகள் வரை டெபாசிட் இல்லாமல் வைத்திருக்க முடியும்.
தற்போதைய 5.8 சதவீத வட்டி விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ. 10,000 முதலீடு செய்தால், 10 ஆண்டுகளில் அந்தத் தொகையானது உங்களுக்கு ரூ.16 லட்சம் வருமானத்தை தரும். 10 வருடத்திற்கான உங்கள் மொத்த வைப்புத்தொகை 12 லட்சமாக இருக்கும், மேலும் மதிப்பிடப்பட்ட வருமானம் சுமார் ரூ.4.26 லட்சமாக இருக்கும். எனவே, நீங்கள் பெறும் மொத்த வருமானம் ரூ.16.26 லட்சமாக இருக்கும். கூட்டு வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் கணக்கிடப்படுகிறது, இது முதலீட்டாளர்களுக்கு அடிக்கடி வருவாயை ஈட்ட உதவும் என்பதால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.