நாடெங்கிலும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் 3 தவணைகளாக தலா ரூ.2 ஆயிரம் என்ற வீதம் மொத்தம் ரூ.6 ஆயிரம் வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படுகிறது.விவசாயிகளுக்கான 12ஆவது தவணை கடந்த நவம்பர் மாதம் விடுவிக்கப்பட்டது. இந்த நிலையில் 13ஆவது தவணை எதிர்வரும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மத்திய அரசு சார்பில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரையிலும் வெளியிடப்படவில்லை.
விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுவது ஏன் ? : விவசாயத்திற்கு தேவையான இடுபொருள் செலவினங்களை சமாளிக்கவும், விவசாயம் சார்ந்த இதர செலவுகளை எதிர்கொள்ளவும் அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி தங்கள் பெயரில் விவசாய நிலம் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
சமீபத்தில் பயனாளிகள் அனைவரும் அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று பயோமெட்ரிக் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி எண்ணற்ற விவசாயிகள் தங்கள் விவரங்களை அப்டேட் செய்த நிலையில், இந்தத் திட்டத்தில் உங்கள் பெயர் தொடர்ந்து நீடிக்கிறதா, உங்களுக்கு இதுவரை எத்தனை தவணை பணம் வந்துள்ளது என்ற விவரங்களை கீழ்காணும் முறையில் தெரிந்து கொள்ளலாம். அதே சமயம், இதுவரையில் நீங்கள் eKYC விவரங்களை அப்டேட் செய்யவில்லை என்றால், உங்களுக்கு எதிர்வரும் தவணையில் பணம் வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
1. முதலில் https://pmkisan.gov.in/ இணையதளத்திற்கு செல்லவும்.
2. ஹோம் பேஜ் பக்கத்தில் உள்ள Farmers Corner என்னும் மெனுவின் கீழ் Beneficiary Status’ என்பதை கிளிக் செய்யவும்.
3. இப்போது உங்கள் ஆதார் நம்பர் அல்லது வங்கி கணக்கு எண் ஆகியவற்றை குறிப்பிடவும்.
4. இப்போது Get Data என்பதை கிளிக் செய்யவும்.
5. உங்களுக்கு எத்தனையாவது தவணை தொகை வர இருக்கிறது என்ற விவரம் இதில் காட்டப்படும்.
ஆன்லைனின் eKYC விவரங்களை அப்டேட் செய்வது எப்படி ?
* கிஸான் இணையதளத்திற்கு சென்று eKYC அப்டேட் செய்வதற்கான ஆப்சனை கிளிக் செய்யவும்.
* இதையடுத்து ஆதார் எண், கேப்சா எண், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை கொடுக்கவும்.
* உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்-ஐ உள்ளிடவும். இதைச் செய்யும்போது உங்கள் eKYC விவரம் வெற்றிகரமாக அப்டேட் ஆகிவிடும்.