இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் பான் கார்டு வைத்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவருடைய அனைத்துவித பண பரிவர்த்தனைகள் மேற்கொள்வதற்கும் பான் கார்டு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பான் கார்டை நாம் எப்போதும் வெளியே எடுத்துச் செல்ல வேண்டியது அவசியமானாலும், அதனை தொலைத்து விடுவதற்கான ஆபத்துகளும் அதிகமாக உள்ளது
வருமான வரி தாக்கல் போன்ற விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கும் பான் கார்டை நாம் தொலைத்து விட்டால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக நேரிடும். இதன் காரணமாகவே நம்முடைய பான் கார்டை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதைத் தவிர பான் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.
நம் நாட்டு சட்டத்தின் படி ஒரு நபர் ஒரு பான் கார்டு மட்டுமே வைத்திருக்க வேண்டும். மேலும் பான் கார்டு விவரங்களை உள்ளீடு செய்யும் போது சரியாக உள்ளீடு செய்ய வேண்டியதும் அவசியம். ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்து இருந்தால் அவர் அபராதம் செலுத்த நேரிடும். அவருடைய பான் கார்டு கேன்சல் செய்வது மட்டுமல்லாமல் அவருக்கு இந்திய வருமான வரி துறையால் அபராதமும் விதிக்கப்படும்.
முக்கியமாக வருமான வரி தாக்கல் செய்யும்போதும், உங்களது பேன் கார்டு நம்பரை சரியாக உள்ளீடு செய்ய தவறினீர்கள் என்றால் நம் நாட்டு சட்டத்தின் படி இந்திய வருமான வரித்துறையில் பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். எனவே உங்களுக்கு இரண்டு பான் கார்டுகள் இருந்தால் உடனடியாக ஒரு பேன் கார்டை வருமானவரித்துறையிடம் ஒப்படைத்து விட வேண்டும். இப்படி நீங்களாகவே ஒப்படைக்கும்போது உங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்பட மாட்டாது. மேலும் இவ்வாறு பான் கார்டு சரண்டர் செய்வதற்கு என்று ஆன்லைனிலும், ஆஃப்லைன் வழியாகவும் கூட உங்களுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.