இந்த பென்ஷன் திட்டம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால் (LIC) நிர்வகிக்கப்படுகிறது. மத்திய அரசால் ஆதரிக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் பென்ஷன் பேமென்ட்ஸ்களுக்கு அரசால் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்கான நிதிப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டது. மூத்த குடிமக்களின் ஓய்வு காலத்தில் ஏற்படும் செலவுகளை சமாளிக்க உதவுகிறது. இந்த பென்ஷன் பாலிசியை ஆஃப்லைன் அல்லது எல்ஐசி-யின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மூலம் எடுக்கலாம்.
எனினும் இந்த பென்ஷன் திட்டம் எப்போது முதல் எப்போது வரை கிடைக்கும் என்பதை அவ்வப்போது அரசு தான் அறிவிக்கும். அந்த வகையில் தற்போது இந்த பென்ஷன் திட்டம் வரும் மார்ச் 31, 2023 வரை கிடைக்கும். LIC மூலம் செயல்படுத்தப்படும் இந்த PMVVY திட்டம் மாதாந்திர / காலாண்டு / அரையாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் ஓய்வூதியத்தை தேர்ந்தெடுக்கும் ஆப்ஷனுடன் மூத்த குடிமக்களுக்கு கிடைக்கிறது. மேலும் சீனியர் சிட்டிசன்களுக்கு உத்தரவாதமான வருவாய் விகிதத்தின் அடிப்படையில் உறுதிசெய்யப்பட்ட பென்ஷன் தொகையை வழங்குகிறது.
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனாவில் (PMVVY) முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 60 வயதாக இருக்க வேண்டும். இந்த பாலிசியின் காலம் 10 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணையும் ஒரு நபர் மாதம் தோறும் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை அல்லது 6 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கு ஒருமுறை முதலீடு செய்யலாம். முதலீடு செய்வதன் அடிப்படையில் குறைந்தபட்ச ஓய்வூதியமாக முறையே மாதம் ரூ.1,000, காலாண்டுக்கு ரூ.3,000, அரையாண்டுக்கு ரூ.6,000 மற்றும் ஆண்டுக்கு ரூ.12,000 என பெறலாம்.
திருத்தப்பட்ட முதலீட்டு தொகை : PMVVY அறிமுகப்படுத்தப்பட்ட போது முதலீட்டு வரம்பு ரூ.7.5 லட்சமாக இருந்தது. பின்னர் கடந்த 2018-ல் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இந்த திட்டத்திற்கான முதலீட்டு வரம்பை ரூ.15 லட்சமாக அதிகரிக்க ஒப்புதல் அளித்தது. தவிர ஆண்டுக்கு ரூ.12,000 ஓய்வூதியம் பெற குறைந்தபட்ச முதலீடு ரூ.1,56,658-ஆகவும் திருத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் திட்டத்தில் தங்களிடம் உள்ள மொத்த தொகையை முதலீடு செய்து 10 ஆண்டுகளுக்கு உத்தரவாதமான பென்ஷன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதிய விகிதங்கள் மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓய்வூதியம் செலுத்தும் முறையைப் பொறுத்து ஆண்டுக்கு 7.40% முதல் 7.66% வரை இருக்கும்.
அம்சங்கள் :
* மருத்துவ பரிசோதனை தேவையில்லை
* பாலிசி காலத்தின் போது பாலிசி எடுத்த நபர் அல்லது அவரது வாழ்க்கைத் துணை தீவிர நோய்களால் பாதிக்கப்படுவது போன்ற விதிவிலக்கான சூழலில் பிளானை விட்டு முன்கூட்டியே வெளியேற அனுமதிக்கப்படுகிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில் செலுத்த வேண்டிய சரண்டர் மதிப்பு பிளானின் கொள்முதல் விலையில் 98% ஆகும்.
* பாலிசி எடுத்த 3 ஆண்டுகளுக்கு பின் பாலிசியின் கீழ் கடன் கிடைக்கும். அதிகபட்ச கடன் தொகை என்று பார்த்தால் கொள்முதல் விலையில் 75%ஆக இருக்கும்.
* 10 வருட காலத்தில் ஓய்வூதியம் பெறுபவர் இறக்க நேரிட்டால் சட்டப்பூர்வ வாரிசுகள்/நாமினிகளுக்கு கொள்முதல் விலை (purchase price) திருப்பி அளிக்கப்படும்.
* அதிகபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.9,250, காலாண்டுக்கு ரூ.27,750, அரையாண்டு ரூ.55,500 மற்றும் ஆண்டுக்கு ரூ.1,11,000 பெறலாம்.