இதற்கு முன் கடனை முறையாக திருப்பிச் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் கடன் வழங்குவதற்கு வங்கிகள் எப்போதும் ஆர்வமாக உள்ளன. முன்பே ஒப்புதல் அளிக்கபட்ட கடன் திட்டங்களும் இந்த வகையை சேர்ந்தவை தான். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, கடனை திருப்பிச் செலுத்தும் உங்கள் தகுதிக்கு தகுந்தாற்போல வழங்கப்படுவதுதான் இந்த ப்ரீ-அப்ரூவ்டு என்னும் ஒப்புதல் அளிக்கப்பட்ட கடனாகும். கடன்களில் இரண்டு வகை உண்டு. முதலாவது பாதுகாப்பு உத்தரவாதம் கொண்ட கடன்கள். அதாவது உங்கள் வீடு, வாகனம் போன்றவற்றுக்காக வழங்கப்படும் கடன். இரண்டாவது பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாத கடன். உங்களுக்கான தனிநபர் கடன், கிரெடிட் கார்டு போன்றவை இந்த இரண்டாம் வகையைச் சேரும்.
பொதுவாக வங்கிகளுடன் நீண்ட கால பந்தத்தில் இருக்கின்ற வாடிக்கையாளர்கள், முன்பே ஒப்புதல் அளிக்கப்பட்ட கடனை பெறுவதற்கே அதிக விருப்பம் கொள்கின்றனர். இதுகுறித்து பஜாஜ் ஃபின்செர்வ் நிறுவனத்தின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ள தகவலில், “ஏற்கனவே ஒரு நிதி அமைப்பிடம் இருந்து கடன் பெற்று, அதனை முறையாக திருப்பிச் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற ஒப்புதல் அளிக்கப்பட்ட கடன் வழங்கப்படுகிறது. அதே சமயம், இந்த கடன் வழங்கப்படுவதற்கு முன்பாக, வாடிக்கையாளர்கள் கடனை திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் அவர்கள் மீதான நம்பகத்தன்மை முழுமையாக ஆய்வு செய்யப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடன் வழங்கப்படும் என்ற உத்தரவாதம் கிடையாது
ஒப்புதல் அளிக்கப்பட்ட கடன் என்றால், உங்களுக்கு அது கட்டாயம் வழங்கப்படும் என்று அர்த்தம் கிடையாது. உங்களுக்கு கடன் வழங்கப்படலாம் என்ற சலுகை மற்றும் நீங்கள் அதை பெறுவதற்கான தகுதியை கொண்டுள்ளீர்கள் என்பதை உணர்த்தும் செய்தி மட்டுமே.
இதற்கு அடுத்ததாக, வழக்கமான கடன் பெறுவதற்கு மேற்கொள்ளப்படும் அனைத்து நடைமுறைகள் இதிலும் கடைப்பிடிக்கப்படும் என்று ஃபேங்க்பஜார் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஆதில் ஷெட்டி தெரிவிக்கிறார். ஆனால், வங்கி உடனான நீண்டகால பந்தம் மற்றும் வாடிக்கையாளர்களின் நல்லெண்ண நடவடிக்கை ஆகியவை காரணமாக கடன் ஒப்புதல் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
வட்டி மற்றும் ப்ராசஸிங் கட்டணம்
நீங்கள் வழக்கமாக பெறும் அதே கடன் திட்டங்களைப் போலவே இங்கும் வட்டி மற்றும் ப்ராசஸிங் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. எனினும், இது ஒரு விளம்பரம் அல்லது சலுகை திட்டம் என்பதால் வங்கிகள் உங்களுக்கு வட்டி மற்றும் ப்ராசஸிங் கட்டணத்தில் டிஸ்கவுண்ட் வழங்கக் கூடும். இந்த கடன் சலுகையை நீங்கள் ஏற்றுக் கொள்வதற்கான கால வரம்பும் உண்டு. உதாரணத்திற்கு வீட்டுக் கடன் என்றால் 6 மாத கால அவகாசம் வழங்கப்படும்.
கடன் பெறலாமா
ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பதால், ப்ராசஸிங் காலம் மற்றும் வட்டி விகிதம் போன்றவை குறைவாக இருக்கலாம். ஆனால், வீடு அல்லது கார் வாங்க வேண்டும் என்பது போன்ற தேவைகள் எதுவும் இன்றி, சலுகை கிடைக்கிறது என்பதற்காக மட்டும் கடன் வாங்க வேண்டாம். உங்களுக்கு கடன் தேவை என்றாலும் சரியான வங்கிகளை தேர்ந்தெடுத்து நேரில் வட்டி விவரங்களை விசாரித்து பின்னர் லோன் வேலைகளை தொடங்க வேண்டும்