வருங்கால வைப்பு நிதி என்பது ஊழியர்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து மாதந்தோறும் பெறப்படும் நிதியைக் கொண்டு, குறிப்பிட்ட ஊழியரின் கணக்கில் வரவு வைக்கும் பணியை இந்த நிறுவனம் செய்து வருகிறது. அதாவது பணியாளர்கள் வாங்கும் மாதச் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு பணியாற்றும் நிறுவனம் ஒரு தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்வதாகும்.
ஊழியர்கள் தங்களது பணியில் இருந்து ஓய்வு பெறும் போது அவரது கணக்கில் இருக்கும் நிதிக்கு வட்டியுடன் சேர்த்து வருங்கால வைப்பு தொகையை இந்நிறுவனம் வழங்கும். மேலும் ஊழியரின் பணிக்காலத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை அவரின் நிறுவனத்திடமிருந்து ஓய்வூதியத்திற்காக பெற்றுக் கொண்டு, 58 வயதுக்கு பின்னர் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஒரு தொகையை ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் உங்கள் நிறுவனம் உங்களிடம் இருந்து பிடிக்கும் தொகையை உங்கள் பி.எஃப் கணக்கில் சேர்க்கிறதா என்பது பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம். ஏனெனில் உங்கள் PF கணக்கில் மாதம் மாதம் உங்கள் நிறுவனம் செலுத்தும் தொகை மற்றும் மொத்த பேலன்ஸ் எவ்வளவு போன்ற விவரங்கள் உங்கள் மொபைல் போன்களுக்கு வந்து விடும் அல்லது, நீங்களே ஆன்லைன் மூலமாக இவற்றை சரிபார்த்துக்கொள்ளும் வசதிகள் வந்துவிட்டன. ஒரு வேளை உங்களுக்கு உங்கள் நிறுவனத்தின் மீது சந்தேகம் வரும் பட்சத்தில் அதனை சரிபார்த்துக்கொள்வது நல்லது.
இருந்த போதிலும் அதை பற்றி நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை, ஏனெனில் நிறுவனம் தொகையை செலுத்த தவறினாலோ அல்லது தாமதமாக செலுத்தினாலோ அதற்கான வட்டியுடனும் அபராதத்துடனும் சேர்த்து கட்ட வேண்டும். பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் வட்டி விகிதங்களை EPFO நிர்ணயித்துள்ளது. அதாவது முதலாளி தனது பங்கை ஊழியரின் பிஎஃப் கணக்கில் செலுத்தவில்லை என்றால், சட்டத்தின்படி நிலையான வட்டி விகிதத்துடன் அவர் செலுத்த வேண்டியிருக்கும்.
ஊழியர்களின் பிஎஃப் பங்களிப்பை செலுத்தாததும் குற்றமாக கருதப்படுகிறது. அரசாங்கமும் சட்டப்படி முதலாளியிடமிருந்து பணத்தை வட்டியுடன் வசூலிக்கலாம். செலுத்தாத பணத்தில் 100 சதவீதத்தை 12 சதவீத வருடாந்திர வட்டியுடன் சேர்த்து அபராதமாக விதிக்கப்படலாம். இதேபோல் ஒரு நிறுவனத்தின் ஊழியர் EPFO அமைப்பில் நிறுவனத்திற்கு எதிராக புகார் பதிவு செய்யலாம்.
இதேபோல் கால தாமதத்திற்கு ஏற்ப வட்டி விகிதமும் மாறும். உதாரணமாக ஒரு நிறுவனம் பிஎப் கணக்கில் பணம் செலுத்துவதில் 2 மாதங்கள் அல்லது அதற்கும் குறைவாக தாமதம் இருந்தால் நிறுவனம் ஆண்டுக்கு 5 சதவிகிதம் வட்டி செலுத்த வேண்டும். இதேபோல் 2-4 மாதங்களுக்கு இடையிலான தாமதத்திற்கு 10 சதவீதம் வட்டி விகிதம், 4-6 மாதங்களுக்கு இடையிலான இடையிலான தாமதத்திற்கு 15 சதவீதம் வட்டி விகிதம், 6 மாதங்களுக்கு 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் தாமதம் இருந்தால், அந்த நிறுவனம் ஆண்டுக்கு 25 சதவிகிதம் வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.