இந்தியாவில் அதிக மக்கள் உபயோகப்படுத்தும் போக்குவரத்து வசதியாக இருப்பது ரயில் பயணம் தான். இந்தியாவின் ரயில்வே துறை என்பது பல ஆயிரம் ஊழியர்களுடன் நாடுமுழுவதும் இடைவிடாமல் இயங்கிக்கொண்டு இருக்கிறது. பயண பிரியர்களுக்கு ரயில் பயணம் ஒரு சுகமான பிரயாணமாகவே பார்க்கப்படுகிறது. ரயிலில் ஒரு முழு பெட்டியையோ(கோச்) அல்லது முழு ரயிலையுமே முன்பதிவு செய்வதற்கும் வசதி இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
Full Tariff Rate (FTR) என்ற சேவையின் கீழ், இந்தியன் ரயில்வே பயணிகளுக்கு இந்த வசதியை வழங்குகிறது. இப்படிச் சிறப்பு முன்பதிவு செய்வதற்கு முன்பு நீங்கள் ஒரு சிறப்பு பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை (Password)உருவாக்க வேண்டும். இதற்கு https://www.ftr.irctc.co.in/ftr/ என்ற தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.பிறகு பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் உதவியுடன் உள் நுழைய வேண்டும். இங்கு முழு ரயிலையும் முன்பதிவு செய்ய வேண்டுமா? அல்லது ஒரு பெட்டியை முன்பதிவு செய்ய வேண்டுமா? என்ற ஆப்சன் கிடைக்கப் பெறும். உங்களுக்கு விருப்பமான விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். பின்னர் கேட்கப்படும் விவரங்களை வழங்க வேண்டும்.
எந்த ஊரில் இருந்து எந்த ஊருக்கு, பயணத் தேதி, விரும்பும் கோச் போன்ற தகவல்களை நாம் பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து கட்டண விபரங்கள் வழங்கப்படும். அதை ஆன்லைன் வழியாகச் செலுத்த வேண்டும். ஆனால் முழு கோச் அல்லது முழு ரயிலை முன்பதிவு செய்வதற்குச் சாதாரண முன்பதிவை விடக் கொஞ்சம் அதிக கட்டணம் செலுத்த வேண்டும்.
ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸ், ஏசி 2 டயர், ஏசி 3 டயர், ஏசி 2 கம் 3 டயர், ஏசி சேர் கார், ஸ்லீப்பர் என உங்களுக்கு விருப்பமான எந்த கோச்சையும் முன்பதிவு செய்யலாம். இதற்கு இந்திய ரயில்வே விதிகளின்படி, 30 முதல் 35 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். பாதுகாப்பு வைப்புத் தொகையும் உள்ளது. உங்கள் பயணம் முடிந்ததும் இந்தத் தொகைகள் உங்களுக்குத் திருப்பித் தரப்படும். நீங்கள் ஒரு கோச்சை முன்பதிவு செய்ய விரும்பினால், ரூ. 50 ஆயிரம் வரை செலவாகலாம். உங்களின் பயண தூரத்தைப் பொறுத்து இந்தத் தொகை மாறுபடலாம்.