முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கோடக் மஹிந்திரா வங்கியில், Marginal Cost of Lending Rates (MCLR) விகிதம் 5 பாயிண்ட் அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால், இந்த வங்கியில் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் இனி அதிக EMI தொகை செலுத்த வேண்டியிருக்கும். இந்த புதிய விதி மார்ச் 16-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
முன்னதாக, இந்தியாவின் மாபெரும் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் Benchmark prime lending rate (BPLR) விகிதமானது கடந்த மார்ச் 1-ஆம் தேதி உயர்த்தப்பட்டது. அதற்கு முன்பு 14.15 சதவீதமாக இருந்த BPLR விகிதம் 0.70 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கப்பட்டு தற்போது 14.85 சதவீதமாக உள்ளது. அடிப்படை விகிதம் மற்றும் BPLR ஆகியவற்றை காலாண்டு அடிப்படையில் உயர்த்த எஸ்பிஐ வங்கி திட்டமிட்டுள்ளது.
அதேபோல, மற்றொரு பொதுத்துறை வங்கியான கனரா வங்கியிலும் MCLR விகிதம் உயர்த்தப்பட்டது. அதன்படி ஒரு மாதத்திற்கான MCLR விகிதம் 8 சதவீதம் என்ற அளவிலும், 6 மாதத்திற்கான MCLR விகிதம் 8.40 சதவீதம் என்ற அளவிலும், 3 மாதத்திற்கான MCLR விகிதம் 8.15 சதவீதம் என்ற அளவிலும், 1 ஆண்டுக்கான MCLR விகிதம் 8.60 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டது.
கனரா, எஸ்பிஐ வரிசையில் கோடக் மஹிந்திரா வங்கி : பொதுத்துறை வங்கிகளைப் போலவே MCLR விகிதத்தை உயர்த்தும் நடவடிக்கையை கோடக் மஹிந்திரா வங்கியும் மேற்கொண்டுள்ளது. இதன்படி ஓவர்நைட் கடனுக்கான MCLR விகிதம் 8.25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 1 மாத கடனுக்கு MCLR 8.50 சதவீதமாகவும், 3 மாத MCLR விகிதம் 8.65 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் EMI தொகை : MCLR மற்றும் BPLR விகிதங்களை எஸ்பிஐ வங்கி, கனரா வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகியவை உயர்த்தியுள்ளதைத் தொடர்ந்து, இங்கு கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் EMI தொகை அதிகரிக்க உள்ளது. இந்த வங்கிகளைப் பின்பற்றி மற்ற வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த வரக் கூடிய மாதங்களில் இந்திய பொருளாதாரத்தில் இது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.