இன்றைக்கு உள்ள பொருளாதார நெருக்கடியில் ஒவ்வொரு தனிமனிதருக்கும் சேமிப்பு என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்டது. அதே சமயம் பணத்தைச் சேமிப்பது என்பது ஒவ்வொருவருக்கும் பெரிய சவாலாக உள்ளது என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பிரபல நிதியியல் கல்வி நிறுவனமான ஃபின்சேஃப் இந்தியா நடத்திய கணக்கெடுப்பின் படி, மாத சம்பளம் வாங்கும் நபராக இருந்தாலும், தங்களுடைய நிதி தேவைகளுக்கானத் திட்டமிடலின் போது பெரும் நெருக்கடியையும் சவால்களையும் சந்திக்கின்றனர் என்கிறது ஆய்வு முடிவுகள்.
ஆய்வு கூறுவது என்ன ? : பிரபல நிதியியல் கல்வி நிறுவனமான ஃபின்சேஃப் இந்தியா சமீபத்தில் சுமார் 1,364 மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களிடம் ஆய்வு மேற்கொண்டது. இதன் முடிவில் மாத சம்பளம் வாங்கும் 57 சதவீதம் பேர் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பள பணத்தில் 20 சதவீதத்திற்கும் குறைவாகவே சேமித்துள்ளனர் என்கிறது. இதோடு 24 சதவீத மக்களுக்கு அவர்களின் வாழ்க்கை முறை, கடன்கள் மற்றும் சேமிப்பு மனப்பான்மை இல்லாதது போன்ற காரணங்களால் சேமிக்கும் பழக்கமே இல்லை என்ற அதிர்ச்சி தகவலும் இந்த ஆய்வில் வெளியாகியுள்ளது.
மேலும் இவர்கள் சம்பளம் பெறும் முதலாளிகளின் பலன்களை மட்டும் நம்பியிருக்கிறார்கள் என்றும் தங்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொள்ளவில்லை என்கிறது. இதனால் ஒருவேளை அவர்கள் ஏதாவது ஒரு காரணத்தினால் வேலையை இழக்கும் போது தங்களின் அடிப்படை செலவுகளை கூட சமாளிக்க முடியாமல் திணறும் சூழல் உண்டாகக்கூடும் என்கிறது பின்சேப் இந்தியா நடத்திய ஆய்வுகள்..குறிப்பாக சேமிப்பு பழக்கம் இல்லாத காரணத்தினால் மருத்துவ செலவுகளைக் கூட கவனித்துக்கொள்ள முடியவில்லை.
இதோடு இந்த ஆய்வின் போது 48% மக்கள் தங்கள் நிறுவனங்கள் வழங்கும் மருத்துவக் காப்பீட்டை மட்டும் நம்பியிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் 23% மக்கள் மருத்துவ அவசர நிலைகளுக்குத் தயாராக இல்லை என்கிறது.மேலும் 48 % பேர் ஏதேனும் பங்குகளில் முதலீடு செய்திருந்தாலும், 36 % பேர் நிலையான வைப்புத்தொகை ( FD) மற்றும் காப்பீட்டுக் கொள்கைகள் போன்ற கடன் முதலீடுகளில் ஈடுபட்டு உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் மூன்றில் ஒரு பகுதியினர் அதாவது 34% மக்கள் எதிலும் முதலீடு செய்யவில்லை. இது போன்ற சூழலில் நீங்கள் பரஸ்பர நிதிகள், முறையான முதலீட்டுத்திட்டங்கள் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
நீங்கள் இளம் முதலீட்டாளர்களாக இருந்தால், கடன், நிறுவனத்தின் நிலையான வைப்பு அல்லது மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் ( non-convertible debentures ( NCD)) போன்றவற்றில் தங்களது பணத்தை செலவிடுகிறார்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.புதிய நிதியாண்டில் உங்களது இலக்குகள் என்னவாக இருக்க வேண்டும். ஆண்டு முழுவதும் உங்களால் பணத்தைச் சேமிக்க முடியவில்லை என்றால், நிதியாண்டின் ஆரம்பத்தில் நிதிநிலையை நீங்கள் மேம்படுத்த திட்டமிட வேண்டும்.
முன்னதாக நீங்கள் உங்களுக்குள் பல கேள்விகளைக் கேட்டுக்கொள்வதோடு அதை நிறைவேற்றுவதற்கும் நீங்கள் தயாராக வேண்டும். இதோ கேள்விகள் இங்கே. நீங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வருமானத்தில் குறைந்தது 30 சதவீதத்தையாவது சேமிக்கிறீர்களா? வேலையில்லாத சூழல் ஏற்பட்டால், அதை சமாளிக்க நீங்கள் போதுமான அளவு பணத்தை சேமித்துள்ளீர்களா?
உதாரணமாக உங்களிடம் 3-6 மாத அவசரகால பணமும் குறைந்தது ரூ.10 லட்சம் உடல்நலக் காப்பீடும் உள்ளதா? உங்கள் ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோ பணவீக்கத்தை முறியடிக்கிறதா? போர்ட்ஃபோலியோவில் உள்ள ஆபத்து என்ன?உங்களின் மொத்த EMI உங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வருமானத்தில் 30 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதா? உங்களிடம் நிதி திட்டம் உள்ளதா?இதுப்போன்ற கேள்விகளை உங்களது மனதிற்குள் கேட்டுக்கொள்வதோடு, இதுப்போன்ற விஷயங்களை நீங்கள் நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.