ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ. 84,999 (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலைக்கு நம் நாட்டில் அறிமுகப்படுத்தியது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனமானது, தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் துணைப் பொருளாக ஆஃப்-போர்டு சார்ஜரை வாங்கி கூடுதல் கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு, அந்த கூடுதல் தொகையை திருப்பி தர திட்டமிட்டுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம், மார்ச் 30, 2023 வரை, தனது ஓலா S1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கிய சுமார் 1 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு, மொத்தம் ரூ.130 கோடி வரை திருப்பி தர போவதாக அறிவித்து உள்ளது. இதன் அதிக விலை நிர்ணயம் குறித்து எழுந்த புகார்கள் மீது கனரக தொழில்துறை அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வின் காரணமாக ஓலா நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நமது மத்திய அரசானது, அதன் FAME II என்ற ஊக்கத் திட்டத்தின் கீழ் 10 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரிக் டூ-வீலர்கள் வாங்குவதற்கு நிதியுதவி வழங்குகிறது. அது மட்டும் அல்ல, இந்தத் திட்டத்தின் கீழ், ஓலா எலெக்ட்ரிக், ஏதர் எனர்ஜி மற்றும் டிவிஎஸ் மோட்டார் போன்ற எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையில் 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கி, அதை அரசாங்கத்திடம் இருந்து மானியமாகவும் கோருகின்றன.
ஒரு யூனிட் ரூ. 1.50 லட்சத்துக்கும் குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் டூவீலர்கள் நம் மத்திய அரசின் ரூ.10,000 கோடி மானியத் திட்டத்திற்குத் தகுதியுடையவையாக உள்ளன. இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், அரசு அதிகாரி “இந்திய வாகன ஆராய்ச்சி சங்கமானது (ARAI) ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மேல், அல்லது அதற்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காது
ஆனால், நம் அரசின் FAME திட்டத்தின் கீழ் செய்யப்படும் விண்ணப்பத்தில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, ஓலா உள்ளிட்ட எலெக்ட்ரிக் டூ வீலர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உட்பட, 500 கோடி ரூபாய் மதிப்பிலான மானியங்கள் வெளியிடுவதை அரசாங்கம் இடைநிறுத்தி உள்ளது. ஏனெனில், மானியத்திற்குத் தேவையான வரம்பை பூர்த்தி செய்யவே சில நிறுவனங்கள் தங்கள் வாகனங்களுக்கான சார்ஜர்களை தனித் தனியாக பில் செய்துள்ளதாக அரசாங்கம் கண்டறிந்துள்ளது.