ஏப்ரல் 1ஆம் தேதி முதல், வர்த்தக வாகனங்களின் விலையை 2 முதல் 5 சதவீதம் வரை உயர்த்துவது என்று டாடா மோட்டார்ஸ், மாருதி சுஜுகி, ஹோண்டா, ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. புதிய நிதியாண்டு முதல், இரண்டாம் கட்டமாக பிஎஸ்-6 புகை வெளியேற்ற கட்டுப்பாடு விதிகள் அமலுக்கு வர இருப்பதால் வாகனங்களின் விலையை நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
மாருதி சுஜுகி : ஒட்டுமொத்த பணவீக்கம் மற்றும் ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போன்றவற்றின் காரணமாக வாகனங்களின் விலையை உயர்த்தும் முடிவு எடுக்கப்பட்டது என்று மாருதி சுஜுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், வர்த்தக வாகனங்களின் மிக சரியாக எவ்வளவு விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை அந்த நிறுவனம் தெரிவிக்கவில்லை.இதுகுறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வாகனங்களின் விலையை குறைக்க எங்கள் நிறுவனம் அதிகபட்ச முயற்சிகளை செய்தும் கூட, விலைவாசி உயர்வு காரணத்தால் அதை தவிர்க்க இயலவில்லை’’ என்று கூறினார்.
டாடா மோட்டார்ஸ் : பயணிகளுக்கான வாகன பிரிவில், மாசு கட்டுப்பாடு விதிமுறைகளை மிகக் கடுமையாக இந்த நிறுவனம் பின்பற்றியுள்ளது. வர்த்தக வாகனங்களின் விலையை 5 சதவீதம் வரையில் உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து டாடா நிறுவன அதிகாரி சைலேஷ் சந்திரா கூறுகையில், “எங்கள் வாகனங்களின் செயல்திறன் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றை மேம்படுத்தியுள்ளோம். அதேபோல மாசு கட்டுப்பாடு விதிமுறைகளை தீவிரமாக பின்பற்றியுள்ளோம்’’ என்று கூறினார்.
ஹோண்டா : குறைந்த விலை பிரிவில் உள்ள செடான் வகை கார்களுக்கு அடுத்த மாதம் முதல் ரூ.12 ஆயிரம் வரையில் விலையை உயர்த்துவதற்கு ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மாசு கட்டுப்பாடு விதிமுறைகள் மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்றவை தான் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று இவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஹோண்டா நிறுவனத்தின் செடான் வகை கார்கள், நாட்டில் மொத்த வாகன எண்ணிக்கையில் 2.5 சதவீதமாக உள்ளது.
ஹீரோ மோட்டார்கார்ப் : பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2 சதவீதம் வரையில் உயர்த்தும் நடவடிக்கையை ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. வாகனத்தில் இருந்து எவ்வளவு மாசுபாடு வெளியேறுகிறது என்பதை கண்காணிப்பதற்கான ரியல் டைம் சென்சார்கள் பொருத்தப்பட்டிருப்பதாக இந்த நிறுவனம் தெரிவிக்கிறது.